Facebook Twitter RSS

உளவுத்துறை கைகளில் அல்-காய்தா ‘நட்சத்திர தளபதி’ சிக்கியது எப்படி தெரியுமா?



கிப்து சினாய் பகுதியில் இருந்து, இஸ்ரேலை நோக்கி அல்-காய்தா ஆதரவு இயக்கம் நடத்திய தாக்குதல் ஏதும் இதுவரை வெற்றியளிக்காத நிலையில், அல்-காய்தா தமது ‘நட்சத்திர தளபதி’ ஒருவரை எகிப்துக்கு கொண்டுவர செய்த முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்திருக்கிறது.

இந்த ‘நட்சத்திர தளபதி’யை எப்படியாவது எகிப்து சினாய் பகுதிக்குள் கொண்டுவந்து விட்டால், தமது தாக்குதல்களை திறமையாக அவர் நடத்திக் கொடுப்பார் என்பதால், இவரை எப்படியாவது கொண்டுவர அல்-காய்தா கடும் முயற்சிகள் செய்தது என்கிறார்கள் உளவு வட்டாரங்களில்.
சரி. இதற்கு கடும் முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்? காரணம், இந்த அல்-காய்தா ‘நட்சத்திர தளபதி’ தற்போது இருப்பது, இஸ்ரேலிய சிறையில்!

ஆம். இஸ்ரேலிய சிறையில் உள்ள இந்த அல்-காய்தா முக்கிய புள்ளியை தப்பிக்க வைக்க செய்த முயற்சிதான் தோல்வியில் முடிந்துள்ளது.
அந்தளவுக்கு முக்கியமான நபரா இவர்?

அதை தெரிந்துகொள்ள இவரைப்பற்றிய தகவல்களைத் திரட்டினோம். தகவல்கள் சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. இதோ படித்துப்பாருங்கள்.
இங்கு குறிப்பிடப்படும் நபரின் பெயர் அப்துல் ரஹ்மான் அல்-அட்வி. வயது 41. அல்-அட்வி என்ற பெயரைத் தவிர இவருக்கு வேறு சில பெயர்களும் உள்ளன. அல்-கய்தா இயக்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவர். அல்-காய்தாவின் சவுதி அரேபிய ஆபரேஷன்களை திட்டமிட்டுக் கொடுப்பவர் இவர்தான் என்கிறார்கள்.

சமீப காலமாக அல்-காய்தாவினருக்கு சவுதி அரேபியாவில் நேரம் அவ்வளவு நன்றாக இல்லை. எனவே, சவுதியில் இருந்து கிளம்பி எகிப்துக்கு வந்த அல்-அட்வி, இப்போது யுத்தம் நடைபெறும் சினாய் பகுதியில் சிறிது காலம் தங்கி இருந்திருக்கிறார்.

இவர் தங்கியிருந்தபோது, எகிப்தில் ராணுவ புரட்சி ஏற்பட்டிருக்கவில்லை. சினாய் பகுதியில் யுத்தம் தொடங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மோர்சி தலைமையிலான அரசு ஆட்சி செய்தது.

அதன்பின் ஏதோ திட்டத்துடன் இஸ்ரேலுக்குள் செல்ல முயன்ற அல்-அட்வி, இஸ்ரேலுக்குள் நுழையும்போது இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்திடம் அகப்பட்டிருக்கிறார். அலென்பி பாலத்தை  கடக்க முயலும்போது அல்-அட்வியை மொசாத்தின் ஏஜன்ட்கள் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்.
இந்த அலென்பி பாலம், கிங் ஹூசேன் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது (மேலே போட்டோ பார்க்கவும்). ஜோர்தான் ஆற்றின்மேலாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், ஜோர்தானையும், வெஸ்ட் பேங்கையும் இணைக்கிறது.

எகிப்தில் தங்கியிருந்த அல்-அட்வி, எகிப்து – இஸ்ரேல் எல்லை ஊடாக செல்லாமல், சுற்றுப் பாதையாக ஜோர்தான் சென்று, அங்கிருந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்றபோது சிக்கினார்.
அல்-அட்வி, அலென்பி பாலத்தைக் கடக்க முயற்சிக்கலாம் என்று உளவுத்துறை மொசாத்துக்கு எப்படி தெரியும்?

இவர் அந்தப் பாதையில் வரலாம் என்ற சாத்தியத்தை மொசாத்துக்கு சி.ஐ.ஏ. சொல்லியிருந்தது என்று கூறப்படுகின்றது. சி.ஐ.ஏ.வுக்கு இந்த விஷயத்தை எகிப்திய உளவுத்துறை அல்லது ஜோர்தானிய உளவுத்துறை கூறியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.

எகிப்திய உளவுத்துறை மற்றும் ஜோர்தானிய உளவுத்துறைகளுக்கு, அல்-அட்வி தமது நாடுகளுக்குள் நடமாடியது நன்றாகவே தெரியும் என்கிறார்கள். அந்த நாடுகளில் கைது செய்யப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பியிருக்கிறார். (அல்லது, தப்ப விடப்பட்டு இருக்கிறார்.)

உளவு வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, அல்-அட்வி, எகிப்தில் இருந்து ஏதோ ஒரு ‘பெரிய திட்டத்துடன்’ இஸ்ரேலுக்கு சென்றிருக்கிறார். திட்டம் மிக முக்கியமான திட்டமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அல்-கய்தா ஆபரேஷனில் மிக முக்கிய தளபதியாக உள்ள இவரை ரிஸ்க் எடுத்து இஸ்ரேலுக்கு அனுப்பியிருக்க மாட்டார்கள்.

அல்-அட்வியின் நடமாட்டங்களை எகிப்திய உளவுத்துறை கவனித்துக்கொண்டுதான் இருந்தது. எகிப்தின் சினாய் பகுதியில் இருந்து புறப்பட்டு, தலைநகர் கய்ரோவுக்கு போயிருக்கிறார். கய்ரோவில் வசதிமிக்கவர்கள் வசிக்கும் பகுதியான அல்-முகன்டிசின் ஏரியாவில் அப்பார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.

வாடகைக்கு எடுக்கும்போது, தாம் ஒரு பிசினெஸ்காரர் என்றும், கய்ரோவில் புதிய பிசினெஸ் ஒன்றைத் தொடங்குவதற்கு தான் வந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றார். அப்பார்ட்மென்டின் ஒரு வருட வாடகை, முன்பணமாகச் செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வாடகை முன்பணம், கய்ரோவிலுள்ள, சவுதி வங்கி ஒன்றில் எடுக்கப்பட்ட பேங்க் ட்ராப்ட்டாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.
அல்-அட்வி சவுதியில் இயங்கிய அல்-கய்தாவில் முக்கிய நபராக இருந்தபோதிலும் அங்கிருந்து இயங்கும்வரை தன்னைப் பெரிதாக வெளியே எக்ஸ்போஸ் பண்ணிக் கொண்டதில்லை. இதனால் இவரது பெயரோ, போட்டோவோ எகிப்திய உளவுத்துறையிடம் இல்லை என்று இவர் நினைத்திருக்கலாம்.

ஏன் சொல்கிறோம் என்றால், கய்ரோவிலுள்ள சில அரசு அலுவலகங்களுக்கு சர்வ சதாரணமாகப போய் வந்திருக்கிறார். எகிப்திய தொழில் துறை அமைச்சிலும், வர்த்தக அமைச்சிலும் கய்ரோவில் பிசினெஸ் ஆரம்பிப்பதற்கான அனுமதி பெற, பலதடவை சென்று வந்திருக்கின்றார்.
எகிப்திய உளவுத்துறையும் இவரை கண்டு கொள்ளாதது போலத்தான் இருந்தது. ஆனால் பிரச்னை எப்போது ஆரம்பித்தது என்றால், தமது கய்ரோ அப்பார்ட்மென்ட்டில் இருந்து இவரது செல்போன் ஒருமுறை பயன்படுத்தப்பட்டபோது.

இவரது செல்போனில் இருந்து, சிரியா நாட்டிலுள்ள தொலைபேசி இலக்கம் ஒன்றுக்கு போன் செய்யப்பட்டதுதான், திருப்புமுனை.
சிரியா நாட்டு தொலைபேசி இலக்கம், அல்-கய்தாவின் துணை அமைப்பு ஒன்றில் முக்கியஸ்தருடைய தொலைபேசி இலக்கம் – சர்வதேச அளவில் உளவுத்துறைககளின் (சி.ஐ.ஏ. உட்பட) தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஒரு தொலைபேசி இலக்கம்.

அப்படிப்பட்ட தொலைபேசி இலக்கத்துக்கு கய்ரோ நகரில் இருந்து அழைப்பு ஒன்று வரவே, சி.ஐ.ஏ. உஷாராகியிருக்கின்றது. தங்களுடைய எகிப்திய ஏஜன்ட்கள் மூலமாக செல்போனை வைத்திருந்த நபரைப்பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

கய்ரோவிலிருந்த சி.ஐ.ஏ. ஏஜன்ட் ஒருவர் அல்-அட்வியை உளவு பார்க்கத் தொடங்கியபோது, சி.ஐ.ஏ. ஏஜன்டின் மைக்ரோ கேமரா ஒன்றில் அல்-அட்வியின் உருவம் சிக்கியது. உடனே அந்தப் போட்டோ சி.ஐ.ஏ.வின் தலைமையகத்துக்குப் போனது.

சி.ஐ.ஏ.வின் தலையைகத்தில் இவர் யார் என்பதை அவர்களாக கண்டு பிடித்தார்களா, அல்லது அவர்களது விசாரணை முகாம்களில் உள்ள அல்-காய்தா ஆட்கள் யாராவது போட்டோவில் இருக்கும் நபர் யார் என்று அடையாளம் காட்டினார்களா தெரியவில்லை, எப்படியோ சி.ஐ.ஏ., அல்-அட்வி யார் என்றும், அவர் கய்ரோவில் உள்ளார் என்றும் தெரிந்து கொண்டது.

இது நடந்து சில தினங்களின் பின்னர் ஒரு நாள், பின்னிரவு நேரத்தில் கய்ரோவின் நைட்கிளப் ஒன்றுக்கு வெளியே அல்-அட்வி நின்றிருந்தபோது, அவரை கடத்திச் செல்ல வந்து சேர்ந்தது ஒரு குழு…

இப்போது செல்போனில் மறுமுனையில் பதிலளித்து பதிவாகிய குரலும், சி.ஐ.ஏ. ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த குரலும் ஒரு குரல் என்று ‘வாய்ஸ் ரெக்கக்னிஷன்’ ப்ரோகிராம் மூலம் இலகுவில் கண்டுபிடித்தார்கள்.
எனவே, அந்த செல்போனை வைத்திருக்கும் நபர் அல்-அட்வி என்பது இவர்களுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் அல்-அட்விக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை.

காரணம் அவருக்கு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு அவர் செல்போனை வாங்கிய நிறுவனத்திலிருந்து செல்வதுபோலவே உளவுத்துறையினர் செட்டப் செய்திருந்தார்கள். செல்போன் நிறுவன விற்பனை பிரிவு பெண் ஒருவரின் குரலில், “செல்போன் பாவனைக்கு மேலதிக யூனிட்டுகள் வாங்க விரும்புகின்றீர்களா” என்ற கேள்வி மட்டுமே கேட்கப்பட்டதால், அல்-அட்வி சந்தேகப்படவில்லை.

எனவே தொலைபேசியை தொடர்ந்தும் தன்னுடன் வைத்திருந்தார். எறிந்து விடவில்லை.

இதற்கிடையே இந்த செல்போன் எந்த இடத்திலிருந்து கடைசி அழைப்பை ரிசீவ் பண்ணியது என்று சி.ஐ.ஏ. செக் செய்ய தொடங்கியது. சூயஸ் கால்வாயை கடந்து இஸ்மாயிலியா பகுதியிலேயே செல்போனை வைத்திருக்கும் நபர் இருப்பதை சில நிமிடங்களிலே கண்டுபிடித்து விட்டார்கள்.

எகிப்தின் இஸ்மாயிலியா பகுதிதான், சினாய் நகருக்கு செல்வதற்கான வாயில். இஸ்மாயிலியா வரை சென்றால், அந்த நபர் அங்கிருந்து சினாய் நகரத்துக்கு செல்வார் என்று ஊகித்தது எகிப்திய உளவுத்துறை.

உடனடியாக விசேட அதிரடிப்படைப் பிரிவு ஒன்று சினாய் நகரத்துக்கு அனுப்பப்பட்டது. அவர்களால் அல்-அட்வியைப் பிடிக்க முடியவில்லை.
காரணம் சினாய் நகரம்வரை சென்ற அல்-அட்வி, அங்கு தங்காமல் யு-டர்ன் அடித்து, ஷார்ம்-எல்-ஷேக் என்ற எல்லையோர நகரம் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு படகு மூலமாக எகிப்தில் இருந்து வெளியேறி, ஜோர்தான் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அக்குவாபா என்ற ஜோர்தானிய நகரில் போய் இறங்கியிருக்கிறார்.

இதிலுள்ள மற்றுமோர் விஷயம் என்னவென்றால், சி.ஐ.ஏ.வின் வேண்டுகோளுக்கு இணங்கியே எகிப்திய உளவுத்துறை, அல்-அட்வியை கைது செய்ய பாதுகாப்பு படையினரை அனுப்பியது.

அவர்கள் வேண்டுமென்றே ஆளை நழுவ விட்டதாக உளவு வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது. அதுவும் சாத்தியம்தான்.

அல்-அட்வி ஜோர்தானிய நகரம் அக்குவாபாவில் இற்கிய பின் என்ன செய்தார் என்பது தொடர்பாக, உளவு வட்டாரங்களில் இரு வர்ஷன் தகவல்கள் உள்ளன.

ஒரு வர்ஷனின்படி, ஜோர்தானுக்குள் நுழைந்த அல்-அட்வி அங்கிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்றதை கண்டுபிடித்த சி.ஐ.ஏ., ஜோர்டானிய உளவத் துறையின் உதவியை நாடாமல் நேரே இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை தொடர்பு கொண்டது. அல்-அட்வி இஸ்ரேலை நோக்கி வருகிறார் என்ற விஷயத்தை கூறியது.

மற்றொரு வர்ஷன், அல்-அட்வியை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தது ஜோர்தானிய உளவுத்துறை. அவர் ஜோர்தானுக்குள் நுழைந்ததில் இருந்து அவர்மேல் ஒரு கண்ணும் வைத்திருந்தது. ஆனால் ஏதோ காரணங்களுக்காக அவரை ஜோர்தானுக்கு உள்ளே வைத்துக் கைது செய்ய விரும்பவில்லை.

அல்-அட்வி இஸ்ரேலை நோக்கிப் போவதால், அவரை தடுக்காமல், இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்திடம் தகவல் மட்டும் கொடுத்து விட்டு பேசாமல் இருந்துவிட்டது.

இந்த இரண்டு வர்ஷன் கதைகளில் எது நிஜமோ தெரியவில்லை. ஆனால், அல்-அட்வி வரப்போகும் விஷயம் இஸ்ரேலய உளவுத்துறை மொசாத்துக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. எந்த எல்லை வழியாக அவர் இஸ்ரேலுக்குள் வருவார் என்பதைக்கூட தெரிந்து வைத்திருந்தார்கள்.

இஸ்ரேலியச் சிறையில் இப்போது இருக்கும் அல்-அட்வியை நேரடியாக விசாரணை செய்ய சி.ஐ.ஏ.வுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. (கைது செய்ய உளவு சொன்னதற்கு நன்றி?)
இதுதான் அல்-அட்வி கைது செய்யப்பட்ட பின்னணி.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, எகிப்து சினாய் பகுதியில் யுத்தம் தொடங்குவதற்கு முன்பே இந்த கைது நடந்துவிட்டது. அதன்பின் சின்யில் யுத்தம் தொடங்கவே, அல்-காய்தாவுக்கு தமது நட்சத்திர தளபதியான அல்-அட்வியின் தேவை மிக அவசரமாக இருந்துள்ளது.

சினாயில் உள்ள அல்-காய்தாவினருக்கு தலைமை தாங்க அல்-அட்வி மட்டும் வந்து விட்டால், யுத்தத்தின் போக்கே மாறிவிடும் என்று சொல்கிறார்கள். அந்தளவுக்கு ‘தாக்குதல் யுத்த’ (offensive attack) திட்டமிடலில் அல்-அட்வி கில்லாடியாம்.

இஸ்ரேலிய சிறையில் உள்ள அல்-அட்வியை எப்படி வெளியே கொண்டுவருவது?

கடந்த வாரம், இஸ்ரேலிய சிறையை உடைத்து அல்-அட்வியைத் தப்பவைக்க ஒரு முயற்சி நடந்தது.

சிறையுடைப்பு திட்டத்தை நிறைவேற்ற வந்தவர்கள் யாரும் அல்-கய்தாவுடன் நேரடியாக சம்மந்தப்பட்ட ஆட்களல்ல. பணத்துக்காக இப்படியான வேலைகளைச் செய்து கொடுக்கும் மொரக்கோ நாட்டு அன்டர்கிரவுன்ட் குழு ஒன்றுதான் முயன்றது என்று மொசாத் கண்டுபிடித்திருக்கின்றது.

சிறையுடைப்பு முயற்சி தோல்வியில் முடிய, மொரக்கோ அண்டர்கிரவுன்ட் குழுவைச் சேர்ந்த இருவர், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை விசாரித்தபோது, அவர்களுக்கு அல்-அட்வி யார், அவருடைய முக்கியத்துவம் என்ன என்பதுபோன்ற எந்த விஷயமும் தெரிந்திருக்கவில்லை.

“இதோ சிறைச்சாலையின் வரைபடம், இதோ அங்கே சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆளின் போட்டோ. சிறையை உடைத்து ஆளை இஸ்ரேலுக்கு வெளியே கொண்டுவாருங்கள். மில்லியன் கணக்கில் பணம் கொடுக்கிறோம்” என்று மாத்திரம் கூறப்பட்டு முன்பணமாக ஆறு லட்சம் டாலர் பணம் கொடுக்கப்பட்டது என்று கைது செய்யப்பட்டுள்ள இருவரும் கூறியுள்ளனர்.

சரி. இவ்வளவு பணத்தைக் கொடுப்பது யார்? மொரக்கோ நாட்டு கடத்தல்காரர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே!

ஆனால், அவர்களுக்கு தெரியாது. மொரக்கோவிலுள்ள இடைத்தரகர் ஒருவர் மூலமாக பணம் கொடுக்கப்பட்டதால், பணத்தை கொடுத்தது யார் என்றே மொரக்கோ கடத்தல்காரர்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

உண்மையில் பணம் கொடுத்தது யார்? சினாய் பகுதியில் எகிப்திய ராணுவம் மண் கவ்வ வேண்டும் என விரும்பும், அரபு நாடு ஒன்றே பணம் கொடுத்தது என்கிறார்கள். அப்படியானால், மீண்டும் முயற்சிப்பார்களே….!

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: