சிரிய போரிற்கு முன்னதாக ஈராக்கில் கொலின் பவல் ஆடிய நாடகத்தை ஆட முனையும் ஜோன் கெர்ரி
நேற்று அமெரிக்க வெளிவிவகாகார செயலர் ஜோன் கெர்ரி தேசியத் தொலைக் காட்சியில் தோன்றி சிரியா மீது வரவிருக்கும் அமெரிக்க-நேட்டோ தாக்குதலுக்கு பொது மக்கள் ஆதரவுக் கருத்தை ஈர்க்கும் நோக்கம் கொண்ட பொய் அறிக்கை ஒன்றைக் கூறினார். இது அவருடைய சொந்த “கோலின் பவெல் தருணம்” ஆகும்.
பெப்ருவரி 5, 2003ல் அப்பொழுது புஷ் நிர்வாகத்தில் வெளிவிவகாகார செயலராக இருந்த பவெல், ஐ.நா.வில் இழிவான விளக்கக்காட்சியை ஒன்றைச் செய்தார். புகைப்படங்கள், வரைபடங்கள், ஒலிப்பதிவு நாடாக்கள் இவற்றின் துணை கொண்டு இரண்டு மணி நேரம் அமெரிக்காவின் தலைமை இராஜதந்திர அதிகாரி ஈராக்கிற்கு எதிரான போர் நடத்துவதற்கான வழக்கை நிலைநிறுத்த முற்பட்டார். தான் அளித்த ஆதாரங்கள், ஈராக் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டவை என்பதற்கான சான்று என்றும், அவை உலகின் மீது கட்டவிழ்க்கப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.
செய்தி ஊடகமும், இரு கட்சி அரசியல் வாதிகளும், ஈராக் பாரியளவிலான பேரழிவு ஆயுதத் திட்டங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு முன்னாள் தளபதி சிறப்பான வாதத்தை கொடுத்துள்ளார் என அறிவித்து, பவெலின் செயற்பாட்டைப் பாராட்டினர். ஆறு வாரங்களுக்குப் பின்னர், அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கியதோடு ஈராக் மீது குண்டுகள் பொழியப்பட்டன.
பொய்களின் ஒரு தொகுப்பே பவெல் உடைய உரையாகும்.
நைஜீரியாவில் இருந்து மஞ்சள் கேக் யுரேனியம், அலுமினியம் குழாய்கள் அல்லது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஆயுதங்கள் பற்றிய அவருடைய கூற்றுக்கள் எதுவுமே உண்மை அல்ல. அந்நேரத்தில் சுருக்கமாக உலக சோசலிச வலைத் தளம் போருக்கான வாதம் “இழிவான மற்றும் ஏமாற்றுத் தன்மை கொண்ட இராஜதந்திர போலித்தனம்.... ஒரு மகத்தான பொய்யை முன்கணித்து: அதாவது வரவிருக்கும் படையெடுப்பு, ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றியது அல்லது அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் உலக சமாதானத்திற்கு பாக்தாத்தின் அச்சுறுத்தல் எனக் கூறப்படுவது முற்றிலும் இழிந்த பொய்.” என நாம்எழுதியது உண்மை என நிரூபணம் ஆயிற்று.
பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், கெர்ரி கொடுத்துள்ள உரை நேர்மையற்ற தன்மையில் சிறிதும் குறைந்ததல்ல, சிடுமுஞ்சித்தனத்திலும் குறைந்ததல்ல. உண்மையில், ஒப்புமையில் பவெலின் விளக்கக்காட்சி, விவரங்களைப் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தது.
சிரியா ஆட்சிக்கு எதிரான, கெர்ரியின் முழு விவரங்களும் இரசாயன ஆயுதங்களைப் பற்றிய பொது ஒழுக்கநெறி கண்டனமாகும். கூத்தாவில் இரசாயன ஆயுதங்கள் தாக்குதல் என்று கூறப்படுபவற்றில் “குடல்-பிரிந்த தோற்றங்கள்” குறித்து விளக்குகையில்: “பொதுமக்களை பொறுப்பின்றி படுகொலை செய்துள்ளது, மகளிரையும் குழந்தைகளையும், நிரபராதியாக உள்ள பார்வையாளர்களையும் இரசாயன ஆயுதங்கள் மூலம் கொலை செய்தது, ஒழுக்கநெறியில் மிக இழிந்த செயலாகும்” என அவர் கூறினார்.
அமெரிக்க அரசாங்கமும் அதன் பிரித்தானிய, பிரெஞ்சு, ஜேர்மனிய நட்பு நாடுகளும் உலகிற்கு இரசாயனப் போர்முறை அல்லது வேறு எந்தவித “ஒழுக்க நெறியின் இழிந்த தன்மை” பற்றி உபதேசிக்கும் தகுதியற்றவர்களாவர். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள், கொடூரங்கள் பற்றி முழுமையான ஆவணக்குறிப்பு எழுதவேண்டுமாயின், பல நூல் தொகுதிகளை நிரப்ப வேண்டும்.
வாஷிங்டன் முழு ஈராக்கிய நகரங்களையும் குறைந்த யுரேனியம், வெள்ளை பாஸ்பரஸால் நச்சுப்படுத்தியுள்ளது. முன்னதாக இது 75 மில்லியன் லீட்டர்கள் இரசாயன ஆயுதமான Agent Orange என்பதை வியட்நாமில் பொழிந்தது. அது மில்லியன் கணக்கான மக்களை பாதிப்பிற்குள்ளாக்கியது. பாதுகாப்பற்ற நகரங்களின் மீது அணுவாயுதங்களை பயன்படுத்திய உலகின் ஒரே நாடு அமெரிக்காதான்— ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி மீது ஒரு முறை அல்ல, இரண்டு முறை. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் சேர்ந்து—நச்சு வாயுவை முதலில் பயன்படுத்தியவை—இவை மில்லியன் கணக்கான மக்கள் இறப்பிற்கு கூட்டாகப் பொறுப்பை கொண்டவை.
இரசாயன ஆயுதங்கள் மூலம் கண்மூடித்தனமான கொலைகள், “ஒழுக்க நெறியின் இழிந்த தன்மை” எனக் கூறுகையில், ஒபாமா நிர்வாகம், எகிப்தில் கடந்த மாதம் மட்டும் ஆயிரக்கணக்கான நிராயுதபாணி எதிர்ப்பாளர்களை தெருக்களில் படுகொலை செய்த எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவிற்கு தொடர்ந்து நிதியளித்து வருகிறது.
சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் படைகள் கூத்தாவில் இரசாயனத் தாக்குதலை நடத்தின என்பதை நியாயப்படுத்த அவருடைய இழிந்த குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் கெர்ரி ஒரு உண்மைச் சான்றைக்கூட முன்வைக்க முடியவில்லை.
அதற்கு பதிலாக, அவர் கூறினார்: “ஏற்கனவே சிரியாவில் நடந்துள்ளது பற்றி நாம் அறிந்து கொண்டுள்ளது, உண்மையைத் தளமாக கொண்டது, மனச்சாட்சி கூறுவது, பொது அறிவு வழிகாட்டுவது.... இரசாயன ஆயுதங்கள் சிரியாவில் பயன்படுத்தப்பட்டன. மேலும் சிரிய ஆட்சி இந்த ஆயுதங்களை பாதுகாப்பாக தக்க வைத்துள்ளது என்பதையும் நாம் அறிவோம். சிரிய ஆட்சி இதே தாக்குதலை ராக்கெட்டுக்கள் மூலமும் நடத்தும் திறனையும் கொண்டுள்ளது.”
இத்தகைய வாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை. கெர்ரி அதை தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பு போராளிகள் இரசாயன ஆயுதங்களை அணுகவும் முடியும், அவற்றைப் பயன்படுத்தியுமுள்ளனர். எதிர்த்தரப்பு குழுக்கள் யூ-ரியூப் களில் எப்படி நச்சு எரிவாயுவை தயாரிக்க இயலும் என்று தங்கள் திறமையை பெருமை பேசியுள்ளனர். ஐ.நா. அதிகாரிகள் பல முறை சிரியாவிற்குள் நடந்த விசாரணைகளில் அசாத் ஆட்சி என்று இல்லாமல் எதிர்த்தரப்பு சக்திகள்தான் முந்தைய இரசாயனத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என தெரிவித்துள்ளனர்.
மிக அதிக அளவில் உலகத் துணை இராணுவ அமைப்பாக மாற்றப்பட்டுவிட்ட CIA, அத்தகைய ஆயுதங்களை அணுக இயலும், எதிர்த்தரப்பிற்கு எளிதில் கிடைக்கவும் செய்ய முடியும்.
சிரியாவிற்கு எதிரான தன் குற்றச்சாட்டுக்கள், “பொது அறிவை” அடிப்படையாக கொண்டது என்னும் கெர்ரியின் கூற்று பொய்யானது: பொது அறிவு என்பதை சிரிய நிலைமைக்கு பயன்படுத்தினால், துல்லியமாக எதிர் முடிவிற்குத்தான் இட்டுச் செல்லுகிறது.
போரில் தோற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்தரப்பு ஓட்டம் பிடிக்கிறது: அவர்களின் ஒரே நம்பிக்கை அதன் அமெரிக்க, ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு ஆதரவாளர்களின் பாரிய இராணுவத் தலையீடுதான். முன்பு ஒபாமா நிர்வாகத்தால் “சிவப்புக் கோடு” என்று விவரிக்கப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதல் என்பது இத்தலையீட்டிற்கு தேவையான போலிக்காரணத்தை அளிக்கிறது.
மற்றொரு குறிப்பிடத்தக்க அறிக்கையில், வாஷிங்டன் அசாத்திற்கு எதிரான அதன் குற்றச்சாட்டுக்களுக்கு சான்றுகளை அளிக்க விரும்பவில்லை என்பதை கெர்ரி பின்புறமாக ஒப்புக் கொண்டுள்ளார். “பான் கி-மூன் கடந்த வாரம் கூறியபடி, ஐ.நா. விசாரணை, எவர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதை நிர்ணயிக்காது, ஏற்கனவே உலகம் இது குறித்து நன்கு அறியும்” என்றார். அதாவது, தாக்கியவர்களின் அடையாளம் பற்றி விசாரணையில் என்ன காட்டினாலும், வாஷிங்டன் அதைப் போலிக் காரணமாக பயன்படுத்தி சிரிய அரசாங்கத்தின் மீது தாக்குதலை நடாத்தும்.
தாக்குதல் என்பது குறித்து விசாரணை நடத்த "கட்டுப்பாடற்ற" அணுகுதலை சிரியா அனுமதிக்க வேண்டும் என்று கோரிய பின்னர், கெர்ரி, இக்கோரிக்கையை அரசாங்கம் ஏற்றது குறித்து, அது எப்படியும் ஒரு விஷயமே இல்லை என்று அறிவித்து, ஏனெனில் “நம்பகத்தன்மை இனி வருவதற்கில்லை” என்றார். இக்கோரிக்கைகள் அனைத்தின் நோக்கமும் போருக்கு வழிவகை செய்வதுதான். சிரிய அரசாங்கத்தால் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு நாட்டைத் திறந்துவிடுவது என்பதைத் தவிர சற்றும் குறைவான எந்தச் செயலாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுதி எச்சரிக்கைகளை திருப்தி செய்ய முடியாது.
ஈராக் பற்றி 2003 உரை நிகழ்த்திய சில மாதங்களின் பின்னர் பவெல் முற்றிலும் தெரிந்தே பொய் கூறியிருக்கிறார் என்பது தெளிவாயிற்று. வரவிருக்கும் மாதங்களில், ஒரு காலத்தில் வியட்நாம் போரை எதிர்த்த கெர்ரியும் சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதலின் அடித்தளத்தில் அவருடைய பொய்கள் இணையம் முழுவதும் வெளிப்பட இருப்பதைக் காண்பார்.
0 comments: