சவுதியில் கைது செய்யப்பட்ட இரு தீவிரவாதிகள்! அதியுச்ச உஷார் நிலையில் ஏமன்!!
சவுதியில்,
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு
தீவிரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது சவுதி அரசு. கடந்த
வாரம்தான் அமெரிக்கா தமது தூதரகங்கள் பலவற்றை அச்சுறுத்தல் காரணமாக மூடியிருந்தது.
அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ஏமன் நாட்டில் திட்டம் போடப்பட்டது
என்று சி.ஐ.ஏ. கூறியிருக்க, தற்போது சவுதியில் கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர்
ஏமன் நாட்டவர் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. மற்றைய நபர் சாட் நாட்டவர்.
இவர்கள் இருவரும் தாக்குதல் பற்றி தகவல் தொடர்புகளை வைத்திருந்ததை சவுதி
உளவுத்துறை ஒட்டுக் கேட்டதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொபைல் போன்கள், மற்றும் வேறு எலக்ட்ரோனிக் சாதனங்கள் மூலம் இவர்கள் தமது தாக்குதல்
திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொலைதொடர்பு சாதனங்கள்,
மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மூலம், இவர்களது தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளில்
உள்ள சிலருடனும் தொடர்புகளை வைத்திருந்தார்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது
என்றாலும், இவர்கள் இருவரும் கடந்த வாரமே கைது செய்யப்பட்டனர் என்று தெரிகிறது. இவர்களிடம்
விசாரணை செய்யப்பட்டபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இரு தினங்களுக்கு முன்
ஏமன் நாட்டின் குறிப்பிட்ட சில இலக்குகள் மீது சி.ஐ.ஏ. உளவு விமான தாக்குதல்களை நடத்தியது
என்றும் கூறுகிறார்கள்.
அந்த உளவு விமானத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில்
அல்-காய்தாவின் சீனியர் உறுப்பினர்கள் சிலரும் அடக்கம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
ஏமன் நாட்டில் மேலும் அமெரிக்க உளவு விமான தாக்குதல்கள் தொடர வாய்ப்பு உள்ளது. தவிர,
ஏமன் நாட்டு ராணுவமும், தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவான பகுதிகளில் களத்தில் இறக்கி
விடப்பட்டுள்ளது.
0 comments: