24 போலீஸாரை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொன்ற அல்-காய்தா
எகிப்தில் யுத்தம் நடைபெறும் சினாய் பகுதியில் அல்-காய்தா ஆதரவு இயக்கம் மேற்கொண்ட ராக்கெட் தாக்குதலில், போலீஸாரை ஏற்றிச்சென்ற இரு பஸ்கள் தாக்கப்பட்டன. 24 போலீஸார் மரணமடைந்தனர். இவர்களில் எண்ணிக்கை குறிப்பிடப்படாத போலீஸ் உயரதிகாரிகளும் அடக்கம்.
இன்று (திங்கட்கிழமை) சற்று நேரத்துக்கு முன் நடைபெற்ற தாக்குதல் இது என்பதால், இதுவரை யாரும் தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட பாணியைப் பார்த்தால், இது அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் தாக்குதல் என்றே தெரிகிறது.
போலீஸ் படையை ஏற்றிக்கொண்டு இரு பஸ்கள் சினாய் பகுதியில் உள்ள ராஃபா நகரத்தில் இருந்து, எல்-அரிஷ் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எல்லையோர கிராமம் ஒன்றில் வைத்து பஸ்கள் ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகின. உடனே பஸ் நிறுத்தப்பட்டதை அடுத்து, போராளிகள் ஆயுதங்களுடன் பஸ்ஸை சூழ்ந்து கொண்டனர்.
பஸ்ஸில் பயணம் செய்த போலீஸார் கீழே இறக்கப்பட்டு, ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். அதன்பின் எந்திரத் துப்பாக்கிகளால் அவர்கள் சுடப்பட்டனர். இதில் 24 பேர் பலியாகினர்.
துப்பாக்கி சூடுபட்டு கீழே விழுந்தவர்களில் மூவர் உயிரிழக்கவில்லை. அவர்களும் இறந்து விட்டதக கருதி போராளிகள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த மூவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பஸ்ஸில் போலீஸார் கொண்டுவந்த அயுதங்கள் அனைத்தும், போராளிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
0 comments: