Facebook Twitter RSS

முர்ஸியை மீண்டும் அதிபர் பதவியில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும் - இஃவானுல் முஸ்லிமீன்

        
                         சட்டவிரோத ராணுவப் புரட்சியின் மூலம் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வலுவாக நடந்து வரும் நிலையில்,
பிரச்சனையை தீர்ப்பதற்காக பிரதிநிதி குழுவுடனான பேச்சுவார்த்தைக்கு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கைராத் அல் ஷாத்திரை சந்திக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா பின் ஸாயித், கத்தர் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் காலித் அல் அதிய்யா, அமெரிக்க வெளியுறவுத்துறை அண்டர் செகரட்டரி வில்லியம் பேன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
கடந்த மாதம் 6-ஆம் தேதி சட்டவிரோத ராணுவ அரசு கைது செய்ததைத் தொடர்ந்து தோரா சிறையில் ஷாத்திர் அடைக்கப்பட்டுள்ளார்.
மக்களை போராட்டம் நடத்த தூண்டினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். போராட்டத்தை நிறுத்த உடன்படிக்கையை தயாரிப்பதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கெய்ரோவுக்கு வருகை தந்தனர்.
முஹம்மது முர்ஸிதான் எகிப்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் என்றும், அவரைத்தான் அணுகவேண்டும் எனவும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் கைராத் அல் ஷாத்திர் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் அதிபர் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தவர் கைராத் அல் ஷாத்திர் ஆவார். ஆனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முஹம்மது முர்ஸி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதேவேளையில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் பிரதிநிதிகள் கைராத் அல் ஷாத்திரை சிறையில் சந்திக்கவில்லை என்று ராணுவ சட்டவிரோத அரசு கூறுகிறது.
கைராத்தை வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு சந்தித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், தனிப்பட்ட காரியங்களை தவிர பிரச்சனைக்கான தீர்வு குறித்தோ சமரசம் குறித்தோ அவர் பேச மறுத்துவிட்டார் என கருதப்படுகிறது.
முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பினை கடுமையாக விமர்சித்து வரும் தற்காலிக பிரதமர் ஹாஷிம் அல் பிப்லாவியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு கூடுதல் சுதந்திரமாக நடுநிலையாக செயல்படும் நபரை நியமிப்பது, இஃவானுல் முஸ்லிமீன் மற்றும் ஸலஃபிகளின் அந்நூர் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அமைச்சரவையை நியமிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளை பிரதிநிதிக்குழு முன்வைத்தது.
இத்தகையதொரு தீர்வுக் குறித்து இஃவானுல் முஸ்லிமீன் பதிலளிக்கவில்லை. முர்ஸியை மீண்டும் அதிபர் பதவியில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும் என்று இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது.


SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: