மோட்டார் பைக்கில் வந்து ராணுவத்தை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் மர்ம நபர்கள்!
எகிப்தில் ராணுவ வாகனங்கள் மீது ‘அடையாளம் தெரியாத’ மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது, தொடர்கதையாகி விட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தலைநகர் கய்ரோவை நோக்கி வந்த ராணுவ வாகனத் தொடர் ஒன்றின்மீது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், இரு ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்ற ஹிட்-அன்ட்-ரன் சம்பவம், கடந்த வாரத்தில் மூன்றாவது தடவையாக நேற்று நடைபெற்றுள்ளது.
இஸ்மாலியா நகரில் இருந்து கய்ரோவை நோக்கி இந்த ராணுவ வாகனத் தொடரணி வந்துகொண்டிருந்தது. வாகனத் தொடரணியில் ராணுவ ட்ரக்குகள், தாக்குதல் டாங்கிகளையும், கவச வாகனங்களையும் வீதியில் இழுத்து வந்து கொண்டிருந்தன.
வாகனத் தொடரணி கய்ரோவை நெருங்கிவிட்ட நிலையில், வீதியில் எதிரே வந்த மோட்டார் பைக்குகளில் வந்த, ஹெல்மெட் அணிந்திருந்த சிலர், திடீரென ராணுவ ட்ரக்குகள் மீது எந்திரத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அதில் இரு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ராணுவத்தினர் தரையில் குதித்து திருப்பிச் சுடத் தொடங்கியபோது, மோட்டார் பைக்கில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். எந்தவொரு இயக்கமும் இந்த தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவில்லை.
கடந்த திங்கட்கிழமை மற்றும், புதன் கிழமைகளில் இதே போன்ற இரு தாக்குதல்கள், போர்ட் சையத் பகுதியில் நடைபெற்றன. அவற்றிலும், மோட்டார் பைக்கில் வந்தவர்களே தாக்குதல் நடத்தியதில், திங்கட்கிழமை 3 ராணுவ வீரர்களும், புதன் கிழமை 8 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
போர்ட் சையத் பகுதியில் தாக்குதல் நடத்தியவர்கள், ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. அவர்களது முகங்கள் தெளிவாக தெரிந்த போதிலும், அவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
புதன் கிழமை நடந்த தாக்குதலில், மோட்டார் பைக்கில் வந்தவர்கள் ரொக்கட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ராணுவ ட்ரக், மற்றும் ஜீப் வெடித்துச் சிதறியது.
அதற்கும் யாரும் இதுவரை உரிமை கோரவில்லை.
எகிப்தில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி நடக்கும் புதிய அரசுக்கு, ‘முஸ்லிம் சகோதர சமூகம்’ அமைப்பும், அங்குள்ள அல்-காய்தா ஆதரவு இயக்கமும் பெரும் சவாலாக உள்ளன. இந்த மோட்டார் பைக் அதிரடித் தாக்குதல்களை, இந்த இரு தரப்பில் யார் செய்கிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.
0 comments: