காசாவில் இருந்து 2.5 கி.மீ. நீளமான சுரங்க பாதையை கண்டுபிடித்தது இஸ்ரேலிய ராணுவம்!
காசா பகுதியில் 2.5 கி.மீ. நீளமான சுரங்கப்பாதை ஒன்றை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தச் சுரங்கப்பாதை வழியாக வெடிகுண்டுகள் இஸ்ரேலுக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும், பாலஸ்தீனி இயக்கங்கள் உளவுபார்த்தலுக்கு இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்கலாம் எனவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
காசா பகுதியில் கான் யுனிஸ் நகரில் ஆரம்பிக்கும் இந்த சுரங்கப்பாதை, இஸ்ரேலின் கிபுட்ஸ் அய்ன் ஹஷ்லோஷா என்ற இடத்தில் முடிவடைகிறது. சுரங்கப்பாதையின் நடுவே, சிலசில இடங்களில் மறைவாக துவாரங்கள் விடப்பட்டுள்ளன. இந்த இடங்கள், இஸ்ரேலிய எல்லைக்குள் உள்ளன.
இஸ்ரேலுக்குள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு முன் அப் பகுதியை உளவு பார்க்க இந்த துவாரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
நேற்று மாலை இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல், காசா பகுதிக்குள் சிமென்ட், இரும்புக் கம்பிகள் உட்பட கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான பர்மிட்டுகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது இஸ்ரேல்.
மறு அறிவித்தல் வரும்வரை, காசா பகுதிக்குள் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: