டமஸ்கஸ் மீது தாக்குதல்கள் ஆரம்பம் - சிரிய சமரில் தற்கொலை தாக்குதல் களம் திறப்பு!!
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே செக்பாயின்ட் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை அடுத்து, அந்தப் பகுதியில் யுத்தம் மூண்டது. இந்த பகுதியில் நடந்த சண்டையில், 16 ராணுவ வீரர்களும், 15 தீவிரவாத அமைப்பினரும் நேற்று கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராளி அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமான ம்லேஹாவில் இருந்து அரசு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜரமானா நகரத்துக்கு செல்லும் பிரதான செக்-பாயின்ட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிப்பொருள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை செலுத்திவந்த மனித வெடிகுண்டு தீவிரவாத உறுப்பினர் ஒருவர் செக்-பாயின்ட்டின் காவலரணில் மோதியதில் கார் வெடித்துச் சிதறியது.
அதையடுத்து, ராணுவம், தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே ம்லேஹா நகரை நோக்கி ராக்கெட் தாக்குதல்களை நடத்த தொடங்கியது. போராளி அமைப்பினர் திருப்பி தாக்க, சில மணி நேரம் அங்கு கடும் யுத்தம் நடந்தது.
தற்கொலை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை உரிமை கோரவில்லை. ஆனால், தாக்குதல் நடைபெற்றுள்ள ஏரியா, மற்றும் தாக்குதல் முறையை வைத்துப் பார்த்தால், அல்-நுஸ்ரா இயக்கத்தின் தாக்குதல் இது என்று ஊகிக்கலாம். அல்-நுஸ்ரா, சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத இயக்கம்.
தற்போது யுத்தம் ஓரளவுக்கு ஓய்ந்துள்ள போதிலும், இந்த செக்-பாயின்ட் மூடப்பட்டு விட்டது. இரு நகரங்களுக்கும் இடையே பொதுமக்கள் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
0 comments: