ஆப்கானில் இன்று ஏராளமான மனித வெடிகுண்டுகளின் ‘மிகப்பெரிய’ தற்கொலை தாக்குதல்! :viruvirupu
ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கட்கிழமை) சற்று நேரத்துக்குமுன் நடந்தப்பட்ட மிகப்பெரிய தற்கொலை தாக்குதல் காரணமாக, நேட்டோ படைகளுக்கான சப்ளை பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
‘மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்’ என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? எத்தனை மனித வெடிகுண்டகள் வெடித்தன என்ற கணக்கே சொல்ல முடியாத அளவில், ஏராளமானவர்கள் தமது உடல்களில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து தாக்கினார்கள்!
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், ஜலாலாபாத்துக்கும், தொர்க்காமுக்கும் இடையேயுள்ள வேகப் பாதையில் இன்று காலை நேட்டோ சப்ளை ட்ரக்குகள் வரிசையாக வந்துகொண்டிருந்தபோது, வந்து இறங்கிய தலிபான் இயக்கத்தினர் இந்த தாக்குதலை நடத்தினர்.
முதலில் ட்ரக்கில் இருந்த நேட்டோ படையினரை நோக்கி தாக்குதல் நடத்திய தலிபான்கள், ட்ரக்குகளை நோக்கி கையெறி வெடிகுண்டுகளையும் வீசினர். அதையடுத்து, நேட்டோ படையினரின் 1லிகாப்டர்கள் அங்கு விரைந்து வந்து தலிபான்களின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.
இந்தக் கட்டத்தில் தமது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்திருந்த தலிபான்கள் ஒவ்வொருவராக வெடித்துச் சிதறினர்.
இந்த தாக்குதலில் நேட்டோ படையினருக்கு சொந்தமான பல ட்ரக்குகள் அழிக்கப்பட்டன. அந்த ட்ரக்குகளில் எத்தனை பேர் இருந்தனர், சேத விபரம் எவ்வளவு என்று தெரியவில்லை.
இந்த தாக்குதலுக்கு உரிமைகோரி தலிபான் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் அலி அப்துல்லாசி அனுப்பியுள்ள இமெயிலில், தாக்கி அழிக்கப்பட்ட ட்ரக்குகளில் ராணுவ டாங்கிகளும் ஏற்றப்பட்டு இருந்தன என்று கூறியுள்ளார். மத்திய ஆசிய நாடு ஒன்றில் இருந்து இந்த ட்ரக்குகள் நேட்டோ படைகளுக்கான சப்ளையை எடுத்துக்கொண்டு அந்தப் பாதை வழியாக வந்தன என்று தெரியவருகிறது.
தாக்குதல் நடைபெற்றதால், வேகப்பாதையில் ஆங்காங்கே ட்ரக்குகள் எரிந்துகொண்டு உள்ளதால், தற்போது நேட்டோ படைகளின் இந்த சப்ளை பாதை மூடப்பட்டுள்ளது. (மேலேயுள்ள போட்டோ, இதே பாதையில் கடந்த ஆண்டு நேட்டோ ட்ரக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டது)
0 comments: