காஷ்மீர் ராணுவ ஆபரேஷனில் லஷ்கர் இ-தொய்பா முக்கிய தளபதி சிக்கினார்!
காஷ்மீரில் போராளி இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவரை (திங்கட்கிழமை) கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது, இந்திய ராணுவம். கைது செய்யப்பட்ட நபர், லஷ்கர் இ-தொய்பா (LeT) போராளி அமைப்பின் மிக முக்கிய புள்ளி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர், பரமுல்லா மாவட்டத்தில் இந்திய ராணுவமும், பத்தான் பகுதி போலீஸ் பிரிவும் இணைந்து நடத்திய கூட்டு ஆபரேஷனில் மன்சூர் எனப்படும் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். போராளி இயக்க வட்டாரங்களில் ஷாம்ஸ் பாய் என அறியப்பட்டவர் இவர்.
இந்த மன்சூர், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தின் இணைப்பாளராக இருந்தாராம். அதாவது, பாகிஸ்தானில் இருந்து இந்திய காஷ்மீர் பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் போராளிகளை மறைவிடங்களில் வைத்திருந்து, வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைப்பது, மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுகளை, காஷ்மீர் பகுதிகளில் உள்ள போராளிகளுக்கு தெரிவிப்பது ஆகியவை இவரது பணிகள்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த மன்சூர், கடந்த சில ஆண்டுகளாகவே தேடப்பட்டு வந்த நபராக இருந்தவர். தமது சொந்த மாவட்டத்தில் இருந்து வெளியேறி, சொபோர் பகுதியில் தலைமறைவாக இருந்த இவர், மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட தேடப்படும் போராளிகள் பட்டியலிலும் உள்ளார்.
கைது செய்யப்பட்டபோது மன்சூரிடம், ஒரு கைத்துப்பாக்கி, நான்கு செல் போன்கள், மற்றும் இரு கையெறி குண்டுகள் இருந்தன என்கிறது, இந்திய ராணுவம். தற்போது அடையாளம் தெரிவிக்கப்படாத இடம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் இவர்.
0 comments: