Facebook Twitter RSS

பாரதீய ஜனதா கட்சி என்கிற பெயர் ஒன்றே போதும்

பாரதீய ஜனதா கட்சி என்கிற பெயர் ஒன்றே போதும்; தரம் எளிதில் விளங்கும். இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரலாம். சிலருக்கு காக்கி, காவி, ரத்தம், கடப்பாறை போன்ற வஸ்துக்களும் சிலருக்கு ஊழல், திருட்டு, கொள்ளை, பிட்டுப்படங்கள் போன்ற கந்தாயங்களும் நினைவுக்கு வரக்கூடும். மொத்தத்தில் நாட்டு மக்கள் எவருக்கும் இந்தப் பெயர் மரியாதையான எதையும் நினைவூட்டும் படிக்கு அவர்கள் கட்சி நடத்தியதில்லை.
நாங்கள் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அந்தக் காலத்திலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள், பாரதிய ஜனதாவின் அப்பனான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெள்ளைக்காரனின் அடிவருடி இயக்கம். அதன் நிறுவனர் ஹெட்கேவார் வெள்ளைக்காரனுக்கு ஆள்காட்டி வேலைபார்த்தவர் என்பது வரலாற்றில் அழிக்கமுடியாத எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இவர்களின் ஆள்காட்டி வரலாறு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களின் வெள்ளை அடிவருடித்தனத்தில் வேர்கொண்டிருக்கிறது.
பாஜகவை தெரிந்து கொள்ளுங்கள் !
பாஜகவை தெரிந்து கொள்ளுங்கள் !
நாம் சமகாலத்துக்கு வருவோம். கடந்த இரு பத்தாண்டுகளில் அமுலாக்கப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக தேசத்தின் வளங்கள் ஒவ்வொன்றாய்க் கூறு போட்டு விற்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதிலும் ஒரு புதிய உயரத்தைத் தொட்ட கட்சி பாரதிய ஜனதா. உலகில் எங்குமே இல்லாத நடைமுறையாக பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதற்காகவே தனியே ஒரு அமைச்சரவையை அமைத்து அமைச்சர் ஒருவரைப் பொறுப்பாக நியமித்து தனது விசுவாசத்தை நிரூபித்த கட்சி, பாரதிய ஜனதா. இந்த விசயத்தில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பெர்பாமன்ஸ் காட்டியிருக்கிறார்கள்.
இப்படி ஏகாதிபத்திய சேவைக்கு அடியாட்களைத் தயாரிப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பயிற்சி முறைகளில் தேறி வருபவர்கள் தான் பாரதிய ஜனதாவின் தலைமைப் பதவிகளை அலங்கரிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முறைகள் என்பவை சாமானியப்பட்டவை அல்ல என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளோடு புண்ணிய பாரத தேசத்தின் பழைய புராணங்களிலும், சனாதன தத்துவங்களிலும், இந்து ஞானமரபிலும் ஆழமான பயிற்சிகளை வழங்குகிறார்கள்.
அந்த வகையில் புராண புருஷர்கள் தான் இன்றைய பாரதிய ஜனதா தலைவர்களின் வழிகாட்டிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு கடுமையான பயிற்சிகளில் தேறிவரும் பாரதிய ஜனதா தலைவர்கள் களத்தில் தகத்தகாய சூரியர்களாய் மிளிர்வதை நாடு அவ்வப்போது கண்டு களித்து வருகிறது. நினைவூட்டலுக்காக சில சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.
பாலாறும் தேனாறும் பாய்ந்தோடும் குஜராத் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் மேல் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது பத்திரிகையாளர் ஜனக் தாவேயின் கவனத்தை சவுத்ரி மற்றும் பரத்வாஜ் என்கிற இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கவர்ந்துள்ளனர். கையில் ஐ-பேட் கருவியை வைத்து எதைப் பற்றியோ மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்த இரண்டு எம்.எல்.ஏக்களையும் கூர்ந்து கவனித்துள்ளார் ஜனக். அப்போது தான் விசயம் விளங்கியுள்ளது; அதாவது, நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் சூட்டைத் தணிப்பதற்காக இவ்விரண்டு எம்.எல்.ஏக்களும் நீலப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காவி நாயகர்கள் நீலத்திற்கும் இரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
‘ஆபாசப் படம்’ என்பது பாரதத்தின் ஞான மரபின் ஆழ அகலங்களை அறியாத சிறுவர்களான நமது புரிதலுக்காக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் கொள்க. இந்துக் கோயில் சுற்றுச் சுவர்களில் தானே அந்தக்கால ‘டைம்பாஸ்’ பத்திரிகையே அச்சடிக்கப்பட்டுள்ளது. போகட்டும். குஜராத் பாரதிய ஜனதாவின் சாதனைகளை அதே சமயத்தில் கருநாடக பாரதிய ஜனதா விஞ்சிய சம்பவமும் நடந்தது. எடியூரப்பாவையே இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கிளையாயிற்றே கருநாடக பா.ஜ.க கிளை!
குஜராத்தில் எம்.எல்.ஏக்கள் என்றால் கருநாடகத்தில் அமைச்சர்கள். அதுவும் மூன்று அமைச்சர்கள். பாட்டில், கிருஷ்ணா மற்றும் லக்ஸ்மன் ஆகிய மூன்று அமைச்சர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கருநாடக சட்டசபையில் அமர்ந்து மன அமைதிக்காக பிட்டுப்படங்கள் பார்த்த சம்பவம் பாரதத் தாயின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பொருத்துவதாக அமைந்தது. இதைத் தான் ஆர்.எஸ்.எஸ் வாலாக்கள் தங்களது தினசரி பிரார்த்தனையின் இறுதி வரியாகச் சொல்கிறார்கள் – ‘பரம் வைபவன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்’ ; அதாவது, பாரதத் தாயே, உன்னை இந்த உலகில் பரம வைபவமான நிலைக்கு உயர்த்துவேன்.
ராகவ்ஜி
ராகவ்ஜி
பாரதத் தாயின் புகழ் பட்டொளி வீசிப் பறக்கச் செய்யும் இந்த புண்ணிய காரியத்தில் கடந்த காலங்களில் எத்தனையோ பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் சஞ்செய் ஜோஷியின் சி.டியையும், உமா பாரதி கோவிந்தாச்சார்யாவின் துறவுக் காதலையும் நன்றி கெட்ட இந்த நாடு வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஸ்வயம் சேவகர்களால் மறக்க முடியாது. இவ்வாறான புண்ணிய காரியங்களைப் பட்டியலிடத் துவங்கினால் அதற்கு இந்தப் பூமிப் பந்தின் மேலிருக்கும் மரங்களையெல்லாம் காகிதமாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கினாலும் முடியாது. அப்படியும் மீறி முயற்சிக்க வேண்டுமானால், பட்டியல் எழுதப்படும் காகிதம் பறந்து போகாமல் பிடித்துக் கொள்ள நிலவுக்கு நான்கு ஸ்வயம் சேவகர்களை அனுப்ப வேண்டியிருக்கும். நீளம் அதிகமாயிற்றே!
சரி இருக்கட்டும் சார், எதுக்கு இந்தப் பழைய பெருமைகளையெல்லாம் இப்போ பேசிக்கிட்டு? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் தீரர்களின் வரிசையில் தற்போது இன்னுமொருவர் சேர்ந்துள்ளார். அவரை அறிமுகம் செய்வதற்கான பீடிகை தான் இது.
மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா அரசின் நிதி மந்திரியாக இருந்தவர் ராகவ்ஜி. 79 வயது இளைஞர். இவரது வேலைக்கார இளைஞர் தன்னை ராகவ்ஜி ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாகவும் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக சி.டி ஒன்றையும் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட சி.டியைப் பார்த்த சி.என்.என் ஐபிஎன், ராகவ்ஜி மாத்திரமின்றி அவரது சகாக்களும் அந்த இளைஞரைத் துன்புறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கிறது. விவகாரம் வெடித்த பின், கதவைத் திறந்தால் கேமரா வரும் என்கிற பௌதீக விதியைக் கூட அறியாத அப்பாவியான ராகவ்ஜியை பாரதிய ஜனதா ராஜினாமா செய்ய வைத்துள்ளது. சி.டியில் கண்டுள்ள செயல் குற்றமா அல்லது செயலுக்கு கட்டாயப்படுத்தியது குற்றமா என்று இன்னும் பாரதிய ஜனதா மேலிடம் தெளிவு படுத்தவில்லை என்பதையும் நாங்கள் குறிப்பிட்டு விடுகிறோம். நடுநிலைமை முக்கியமாயிற்றே!
ஸவ்யம் சேவகர்கள்
ஸவ்யம் சேவகர்கள்
அடுத்து பாலியல் வன்முறையில் ஆண் பெண்ணை வன்புணர்ச்சி செய்வதுதான் நமது பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. ஆனால் ஒரு ஆண் அதுவும் வயதான ஆண் ஒரு இளவயது ஆணை வன்புணர்ச்சி செய்யலாம் என்று பாலியல் குறித்த நமது ரெடிமேடு, பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். பாலியல் சிந்தனை குறித்த கலகம் அதுவும் ஒரு காவிக் கட்சியிடம் இருந்து வருகிறது என்றால் அது அடையள அரசியலின் வெற்றியல்லவா!
போகட்டும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் பல்வேறு கட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உலகிலேயே புராணங்களின் அடிப்படையில் கட்சி நடத்துவது பாரதிய ஜனதா மட்டுமே. அவ்வாறிருக்க பாரத புண்ணிய தேசத்தின் புராணங்களில் சொல்லப்படாத எதையும் ராகவ்ஜி புதிதாக செய்து விடவில்லை என்பது எமது துணிபு. ஐயப்பனை தெய்வமாகக் கொண்டிருக்கும் தேசத்தில் ராகவ்ஜி மட்டும் என்ன பெரிய பாவம் செய்து விட்டார் என்று தீர்மானிக்கும் உரிமையை உங்களிடமே விட்டு விடுகிறோம்.
தினசரி சூரிய நமஸ்காரத்தாலும் குத்துச் சண்டை பயிற்சிகளாலும் ஸ்வயம்சேவகர்களின் உடலைத் தயார்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், அவர்களின் மனதுக்கு இந்திரன் தொடங்கி சந்திரனில் தொடர்ந்து சிரீ கிருஷ்ணர் வரையிலான உத்தம புருஷர்களின் கதைகளின் மூலம் உரமூட்டுகிறது. இவ்வாறு புடம் போடப்பட்டு பாரதிய ஜனதாவின் தலைவர்களாக உயரும் ஸ்வயம்சேவகர்கள், தாங்கள் செவிவழியாகக் கற்றுக் கொண்ட பாடங்களை செயல்வழியாக பரீட்சித்துப் பார்ப்பதில் தர்க்க மீறல் ஏதும் இருப்பதாக எமது சிறுமூளைக்குத் தெரியவில்லை. அப்படியிருக்கும் போது அமைச்சர் ராகவ்ஜி தனது 79 வயதில் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையைக் கொண்டாடாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்ததன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை, உங்களுக்குப் புரிகிறதா?
அடுத்து ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று பா.ஜ.க உறுதியாகச் சொல்லி வருகிறது. ஒரு வேளை அவர்கள் அப்படி ஆட்சியைப் பிடித்து விட்டால் ஊடகங்களுக்கும், இரசிகர்களுக்கும் சென்சேஷன் செய்திகளுக்கு கொண்டாட்டம்தான். பிட்டுப்படங்களையும், பலான காட்சிகளையும், நீலக் காட்சிகளையும், மஞ்சள் எழுத்துக்களையும் தேடிப்பிடித்து அறிய வேண்டிய தொல்லையை காவிக் கட்சி தரவே தராது. ஏனெனில் அது பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல, பலான கட்சியும் கூட.
நன்றி: தமிழரசன்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: