கூடங்குளம் அணு உலையை கடல் வழியாக முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்; பெரும் பதற்றம்!
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடல்வழி முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து படகுகளில் புறப்பட்ட மீனவர்கள் தற்போது கூடங்குளம் அணு உலை அருகே 500 மீட்டர் தொலைவில் கடலில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்றும் கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற போது பெரும் வன்முறையில் முடிந்தது. இதேபோல் கடந்த 22-ந் தேதியும் கடல்வழி முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுகள் மூலம் கூடங்குளம் நோக்கி சென்றனர். கூடங்குளம் அணு உலை அருகே கடலில் 500 மீட்டர் தொலைவில் கடலில் படகுகளில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளத்தில் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன.
அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தாலும், போலீசார் குவிக்கப்பட்டதாலும் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்-உதயகுமார்:
இந் நிலையில் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. போராட்டக் குழுவினர் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வரும் 29ம் தேதி சென்னையில் சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நிச்சயம் நடக்கும். இதற்கு சில கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
0 comments: