சுரங்க நிறுவனத்திடம் இருந்து எடியூரப்பா ரூ.20 கோடி லஞ்சம் பெற்றார்: சி.பி.ஐ. குற்றச்சாட்டு
புதுடெல்லி, அக். 17-
கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி முதன் முதலாக ஆட்சி அமைத்த போது, முதல் - மந்திரியாக எடியூரப்பா நியமிக்கப்பட்டார். அப்போது பெல்லாரியை சேர்ந்த தனியார் சுரங்க நிறுவனமான சவுத் வெஸ்ட் கம்பெனிக்கு ராச்சேன ஹள்ளி பகுதியில் 1.12 ஏக்கர் நிலத்தை எடியூரப்பா ஒதுக்கினார். இந்த நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது.
இதன் மூலம், எடியூரப்பா மகன்கள் நிர்வகிக்கும் பிரேரனா கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி அந்த நிறுவனத்தால் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து எடியூரப்பா அவரது மகன்கள் ராகவேந்திரா எம்.பி., விஜயேந்திரா, மருமகன் சோஹன் குமார் ஆகியோர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உயர் அதிகார குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. விசாரணைக்கு பின் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், எடியூரப்பா உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உயர் அதிகார குழு சிபாரிசு செய்திருந்தது.
இதையடுத்து எடியூரப்பா அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோஹன்குமார், முன்னாள் மந்திரி கிருஷ்ணய்யா ஷெட்டி, சவுத்வெஸ்ட் சுரங்க நிறுவன உரிமையாளர் சுனில்சூத் உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் எப்.ஐ.ஆர். இந்த வழக்கு விசாரணை பெங்களூர் சி.பி.ஐ. கோர்ட்டில் நடக்கிறது.
இந்நிலையில் எடியூரப்பா உள்பட 13 பேர் மீதும் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடக முன்னாள் முதல் - மந்திரி எடியூரப்பா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். தனியார் சுரங்க நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கியதில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளன. ராச்சேன ஹள்ளி பகுதியில் 1.12 ஏக்கர் நிலத்தை முறைகேடாக மறு அறிவிப்பு செய்து, சவுத்வெஸ்ட் நிறுவனத்துக்கு எடியூரப்பா வழங்கினார்.
இதன் மூலம் அதிக விலை மதிப்பு கொண்ட நிலம் அடிமாட்டு விலைக்கு வழங்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக அந்த நிறுவனத்தால் எடியூரப்பா குடும்ப கல்வி நிறுவனத்துக்கு ரூ.20 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டது. அரசு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கிய வகையில், அரசு துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இவ்வாறு குற்றப்பத்திரி கையில் கூறப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி மேலிட தலைவர்களுடன் கொண்ட மனக்கசப்பால், டிசம்பரில் புதிய கட்சி தொடங்கப் போவதாக எடியூரப்பா சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து எடியூரப்பாவின் நெருங்கிய நண்பரான முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய்குமார், பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தனியார் சுரங்க நிறுவனத்திடம் இருந்து ரூ.20 கோடி லஞ்சம் பெற்றார் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருப்பது, எடியூரப்பாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
0 comments: