போருக்கான ஆயத்தம்: அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு பயிற்சி
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் பொருளாதார தடைகள் உட்பட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவருகின்றன. ஈரானுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கா – இஸ்ரேல் இரண்டு நாடுகளும் ஞாயிறு முதல் மூன்று வாரங்களுக்கு வான்வழி போர் பயிற்சியில் குதிக்க இருக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் ஈரான் குறித்த அமெரிக்காவின் அடுத்த நிலைப்பாடு என்னவென்ற கேள்விக்கான பதிலை ஒபாமா ஆட்சி அமைதியாக வழங்க இந்த ஏற்பாடு உதவும் என்று எதிர் பார்க்கலாம். இந்த பயிற்சியானது 38 மில்லியன் டாலர்களில் செய்யப்படுகிறது. 3500 அமெரிக்கப் படைகளும், 1000 இஸ்ரேலிய படைகளும் இதில் பங்கேற்கின்றன.
இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் மிகப்பெரிய வான்வழி தாக்குதல் பயிற்சி இதுவாகும். இந்தப் போர்ப்பயிற்சி ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறதா இல்லை சிரியாவிற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பதிலடி கொடுக்க நடத்தப்படுகிறதா என்பது தெளிவாக வரையறை செய்யப்படவில்லை.
இது நாடுகளும் சேர்ந்து போர் நடவடிக்கையில் ஈடுபடுவது எப்படியென்ற பரிசோதனை முயற்சி என்று கூறப்படுகிறது. அதேவேளை இந்த செயற்பாடு முழுமையான போர் மயமாக்கும் வேலை என்ற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது.
அனைத்து குற்றச் சாட்டுக்களையும் இஸ்ரேல் மறுத்துள்ளது. சிரியா – ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்று ஏற்கெனவே மிட் ரோம்னி வைத்த குற்றச்சாட்டுக்கு இந்த 38 மில்லியன் டாலர் பயிற்சி பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு போரை எதிர் கொள்ள வெறும் 38 மில்லியன் டாலரில் செய்யப்படும் பயிற்சி சரியான பயிற்சியாக அமையும் என்று கூற முடியாது. அமெரிக்க வாக்காளருக்கு காதில் பூ சுற்ற இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
0 comments: