நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் முடிவில் மாற்றம் இல்லை: அமெரிக்கா
வாஷிங்டன், ஏப். 27-
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் அமெரிக்க அரசின் கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்து வருபவர், நரேந்திர மோடி. பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவரான நரேந்திர மோடி, வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் வரிசையிலும் முன்னணியில் இருக்கிறார். கடந்த 2005-ம் ஆண்டில் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது.
நரேந்திரமோடி ஆட்சியின்போது கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு கலவரத்தில் 1200-க்கு அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
மத சுதந்திரத்தை மீறப்படுவதற்கு காரணமான எந்த ஒரு வெளிநாட்டு தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கும் அமெரிக்க நாட்டு விதிமுறைகளின்படி ராஜீய விசா வழங்க முடியாது. இந்த அடிப்படையில்தான் நரேந்திர மோடிக்கும் அப்போது விசா மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க எம்.பி.யான ஜோ வால்ஷ், அந்த நாட்டின் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு இரு வாரங்களுக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில், நரேந்திரமோடிக்கு விசா வழங்க மறுக்கும் கொள்கை முடிவை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் அளித்த பேட்டியின்போது, எம்.பி.யின் கடிதத்தை சுட்டிக்காட்டி நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் முடிவில் மாற்றம் வருமா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விக்டோரியா, மோடிக்கு விசா வழங்க மறுக்கும் அமெரிக்காவின் கொள்கை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் சமுதாய அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், நரேந்திரமோடிக்கு விசா வழங்க மறுக்கும் முடிவை மாற்றக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டு இருந்தது.
இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த மத்திய சட்டத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், நமது நாட்டின் முன்னணி மாநிலத்தின் நிர்வாக பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு விசா வழங்க மறுக்கும் இந்த பிரச்சினை மிகுந்த கவலைக்குரியது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
0 comments: