இஸ்ரேலிய வீரரை சுட்டு வீழ்த்திய லெபனான் ராணுவ சினைப்பர் எங்கே?
இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர், லெபனான் ராணுவத்தை சேர்ந்த சினைப்பர் (தொலைவில் இருந்து குறிபார்த்து சுடுபவர்) ஒருவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற இஸ்ரேலிய ராணுவ அறிவிப்பு, இஸ்ரேல்-லெபனான் எல்லையில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, ஏராளமான இஸ்ரேலிய ராணுவத் துருப்புகள் எல்லைப் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, இஸ்ரேலிய வீரரை சுட்டு வீத்தியதாக கூறப்படும் தமது ராணுவ வீரருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என லெபனான் ராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, லெபனான் வீரர் தப்பியோடி மறைந்திருக்கலாம். இரண்டாவது, லெபனான் வீரரை, இஸ்ரேலியர்கள் சிறைப்பிடித்து இருக்கலாம். (அல்லது மூன்றாவதாக, லெபனான் ராணுவமே அரசியல் காரணங்களுக்காக தமது வீரரை மறைத்து வைத்திருக்கலாம்)
கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர், 31 வயதான ஷ்லோமி கோஹன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். எல்லைப் பகுதியில் ரோந்து சென்ற இஸ்ரேலிய படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள், லெபனான் எல்லைக்குள் பிரவேசித்ததை அடுத்து, தொலைவில் இருந்து குறிபார்த்துக் கொண்டிருந்த லெபனான் ராணுவ ஸ்னைப்பர் இவரை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்பதே, லெபனான் தரப்பில் கூறப்படும் தியரி.
லெபனான் பகுதிக்குள் தமது ராணுவ வீரர்கள் பிரவேசிக்கவில்லை என்கிறது, இஸ்ரேல்.
இந்த சம்பவம் இஸ்ரேலிய எல்லைக்குள் ரொஷ் ஹனிக்ரா பகுதியில் நடந்ததாக இஸ்ரேல் கூறுகிறது. எல்லைக்கு மறுபுறம், லெபனானின் ரஸ் நகோரா என்ற இடம் உள்ளது. அங்கு இருந்துதான் லெபனான் வீரர் துப்பாக்கியால் சுட்டதாக இஸ்ரேலிய தரப்பில் சொல்கிறார்கள்.
லெபனான் இஸ்ரேலை நேரடியாக குற்றம்சாட்டவில்லை. ஆனால், லெபனான் அரசு ஆதரவு மீடியாக்கள், இந்த சம்பவம் நடந்தபின் லெபனானின் ரஸ் நகோரா பகுதிக்குள் அதிரடியாக புகுந்த இஸ்ரேலிய படைப்பிரிவு ஒன்று, துப்பாக்கியால் சுட்ட லெபனான் ராணுவ சினைப்பரை கைப்பற்றி, கடத்திச் சென்றிருக்கலாம் என எழுதுகின்றன.
ஒருவேளை அப்படி நடந்திருந்தால், நிலைமை மோசமாகும். (இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டதை அடுத்தே, இஸ்ரேல்-லெபனான் யுத்தம் தொடங்கியது என்பதை ஞாபகம் வைத்திருங்கள்)
லெபனான் ராணுவ சினைப்பர், 6 முதல் 10 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டதாகவும் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு, இந்த தாக்குதல் தொடர்பாக ‘உரிய பதில் நடவடிக்கை’ எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எல்லையின் எந்தப் பக்கத்தில் இருந்து ஏவுகணை கிளம்ப போகிறதோ!
0 comments: