பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பில்லை: தாலிபன்கள் திட்டவட்ட அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம் இல்லை என தாலிபன்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் அமைதியை நிலை நாட்ட தாலிபன்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகவும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதர்உ அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் தேவை என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வர்சிஸ்தான் பகுதியில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் சிக்கி, தாலிபன் போராளிகள் இயக்கத் தலைவர் ஹகிமுல்லா மசூத் கொல்லபட்டார். இத்தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்த போதும், பாகிஸ்தானும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உடந்தை என தாலிபன் அமைப்பு குற்றம் சாட்டியது. மேலும், தாக்குதலிற்கு பழி வாங்கும் விதமாக பாகிஸ்தானின் அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சுட்டுக்கொல்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை என்ற நிலைக்கே இல்லை என தாலிபன்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது அங்கு பதட்ட சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் தலிபான் செய்தித்தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷகித் கூறியிருப்பதாவது, ‘தலைவர் ஹகிமுல்லா மசூத்தை கொன்றவர்களை நாங்கள் மன்னிக்கப் போவதில்லை. பஞ்சாப் மற்றும் பலூசிஸ்தானின் தூரப்பகுதிகளில் இருந்து கூட அவர்களை நாங்கள் விரட்டியடிப்போம்.
எங்களுக்கு எதிராக அதிகமான தாக்குதலை நடத்திய கைபர் பாக்துங்வா பகுதியிலிருந்து அரசுப்படையினரை விரட்டும் நடவடிக்கைகளை தொடருவோம்.
பொதுமக்களை நாங்கள் குறிவைக்க மாட்டோம்,என்றுமே நாங்கள் அப்படி செய்ததும் கிடையாது. பழங்குடியின மக்கள் நாளுக்குநாள் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் தொடர்ந்து கொல்லபடுகிறார்கள் . ஆனால் நவாஸ் ஷெரிப் தலைமையிலான அரசு, ஒரு கையாலாகத அரசாக உள்ளது' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 comments: