திரிபுரா முதல்வராக 4-ம் முறை பதவி ஏற்கிறார் எளிமையின் சிகரம் மாணிக் சர்க்கார்!
அகர்த்தலா: திரிபுரா மாநில முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் எளிமையின் சிகரம் என போற்றப்படும் மாணிக் சர்க்கார். தொடர்ந்து நான்காவது முறையாக தங்களின் முதல்வராக மாணிக் சார்க்காரை மக்கள் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா சட்டசபைக்கு கடந்த மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவுகள் 28ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 49 இடங்களை வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி அமைக்கும்படி தங்களை அழைக்க வேண்டும் என மாநில கவர்னரிடம் கடிதம் வழங்கியது. இதனையடுத்து, நாளை ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், முதல் மந்திரியாக மானிக் சர்க்காருக்கு கவர்னர் டி.ஒய்.பாட்டீல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த 1998ம் ஆண்டிலிருந்து திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருவதும் இந்தியாவின் எளிமையான முதல்வர் என அறியப்படும் மாணிக் சர்க்கார் (64) தொடர்ந்து 4வது முறையாக முதல்வராக பதவி ஏற்பதும் குறிப்பிடத்தக்கது. 3 முறை முதல்வராக தனது பதவியை நிறைவு செய்திருக்கும் மானிக் சர்க்காருக்கு சொந்த வீடோ, காரோ.. ஏன் செல்போனோ இல்லை. முதல்வருக்கு வழங்கப்படும் மாதச் சம்பளத்தையும் கட்சியின் வளர்ச்சி நிதிக்காக வழங்கிவிட்டு, கட்சியிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கி வாழ்க்கை செலவினங்களை கவனித்து வருகிறார். இவரது மனைவி ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. தனது ஆடைகளை தானே துவைத்து பயன்படுத்தும் மாணிக் சர்க்கார், 'என் மனைவியின் பென்ஷனை வைத்து எங்கள் குடும்பம் ஓடுகிறது. எனது தனிப்பட்ட தேவை என்றால்.. ஒரு டப்பா மூக்குப்பொடியும், தினந்தோறும் ஒரு சிகரெட்டும் மட்டும்தான்.. அதற்கு கட்சி கொடுக்கும் தொகையே அதிகம்,' என்கிறார். தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் ஒருவர்தான் இதையும்விட எளிமையாக வாழ்ந்து மறைந்தவர். அவருக்கு வங்கியில் கணக்கு கூட இருந்ததில்லை. இறக்கும் போது அவர் வைத்திருந்து ரூ 160 மட்டுமே!
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.
0 comments: