ஆட்சி அமைப்பதில் இழுபறி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு மேலும் 2 வாரம் அவகாசம் மீண்டும் தேர்தல் வருவதை தவிர்ப்பாரா?
ஜெருசலேம்,
இஸ்ரேல் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 22–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 120 தொகுதிகளில் பிரதமர் பெஞ்சமின் நதான்யாஹூவின் ஆளும் லிகுத் கூட்டணி 31 இடங்களில் வெற்றி பெற்றது. இதுவே தனி பெரும்கட்சியாக இருப்பதால் பெஞ்சமின் ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஆனால் கூட்டணி ஆட்சியில் சேர சில கட்சிகள் நிபந்தனைகள் விதிக்கின்றன. இதனால் புதிய ஆட்சியை அமைப்பதில் 1½ மாதகாலமாக இழுபறி நீடிக்கிறது.
இதனை அடுத்து பிரதமர் பெஞ்சமின் இன்று ஜனாதிபதி ஷிமோன் பெரீசை சந்தித்து மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ளார். அதன்படி வருகிற 16–ந்தேதிக்குள் அவர் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் ஆட்சி அமையாவிட்டால் எதிர்க்கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் அதுவும் நிறைவேறாவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்துவது தவிர்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியான சூழ்நிலை ஒருபுறம் இருக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இம்மாதம் இறுதியில் இஸ்ரேல் செல்ல இருக்கிறார். எனவே அதற்குள் புதிய ஆட்சியை அமைத்து விட வேண்டும் என்பதில் பிரதமர் பெஞ்சமின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
0 comments: