Facebook Twitter RSS


காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள் !


ப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் குமுறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குறிப்பிட்ட சில போலீசு அதிகாரிகள் தன்னை சிக்க வைத்து விட்டனர் என்ற அப்சல் குருவின் குற்றச்சாட்டு விசாரிக்கப்படாமலேயே கள்ளத்தனமாகவும் இரகசியமாகவும் அவர் தூக்கிலிடப்பட்டு விட்டார். அப்சல் குருவின் வழக்கு நாடறிந்த கதை. ஆனால் போலீசாலும் இராணுவத்தாலும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞர்களின் கதைகள் காஷ்மீரில் ஏராளம். பொய் வழக்கு, சிறை, சித்திரவதை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், தலைமறைவாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை காஷ்மீரின் இளைஞர்களுக்கு போலீசும் இராணுவமும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. பல இளைஞர்களை கொடுமைப்படுத்தி போராளிகளாக மாற்றுவதே அரசின் அடக்குமுறைதான் என்கிறார்கள் காஷ்மீர் மக்கள்.
காஷ்மீரின் இளைய தலைமுறை போராளிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்ற சித்திரத்தை கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.
1. சித்திரவதையும் அவமானமும் உருவாக்கிய போராளி
பெயர் : முசாமில் அகமது தர்
வயது : 24
ஊர் : சோப்போர்
தொழில் : மருத்துவ உதவியாளர்
காஷ்மீர் கல் எறிதர்
காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கல்லெறிய வைத்து பின்னர் போராளியாக்கி கொல்கிறார்கள்.
2009-ம் ஆண்டு மருத்துவ உதவியாளர் பட்டம் பெற்று சோப்போர் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார் முசாமில். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்  ஏ.கே.47 துப்பாக்கியை காதலிக்க ஆரம்பித்திருந்தார். ’முசாமில் ஒரு தலைமறைவான லஷ்கர்-ஈ-தொய்பா போராளி’ என்று அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் என்று அறிவித்தார். 2012-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதியன்று ஸ்ரீநகருக்கு வடக்கே 66 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோப்போர் நகரத்தில் பாதுகாப்பு படையினருடனான என்கவுண்டரில் முசாமில் கொல்லப்பட்டார்.
இடையில் என்ன நடந்தது? நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த முசாமில் ஒரு காலத்தில் ராஜீவ்காந்தி எழுத்தறிவு இயக்கத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் கொல்லப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வெள்ளைத் தொப்பி தரித்த குறுந்தாடி வைத்த நம்பிக்கையான முகத்துடன் காட்சியளிக்கிறார். “மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து குடும்பத்தின் கடன்களை அடைக்க உழைத்துக் கொண்டிருந்தார்” என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
ஆனால், நவம்பர் 17, 2010-ல் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது. அன்று போலீசிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த யாரோ இரண்டு பேர் ஒரு மூட்டையை முசாமில் வீட்டு தோட்டத்தில் தூக்கி எறிந்து விட்டு போனார்கள். அதைப் பார்த்து பயந்து போன அவரது அம்மா, யாருக்கும் தெரியாமல் அதை கிணற்றில் தூக்கி போட்டு விட்டார். அந்த செயலில் ஆரம்பித்த தொடர் நிகழ்வுகள் முசாமிலின் உயிரை பறிப்பதில் கொண்டு விட்டன.
விரைவிலேயே போலீசும் பாதுகாப்பு படையினரும் முசாமில் வீட்டுக்கு வந்தனர். முசாமிலின் அப்பா மொகமது அமீன் தர், முசாமில் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களையும் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் முசாமில் சித்திரவதை செய்யப்பட்டார். அவரை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து சகோதரர்கள் இருவரையும் இரண்டு கால்களையும் இரண்டு பக்கம் இழுக்கும்படி செய்தனர். அவர்களது தந்தை இதைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். முசாமிலின் கதறல்களை கேட்டு போலீஸ்காரர்கள் கிண்டல் செய்தார்கள். “மிகவும் அவமானமான மறக்க முடியாத சம்பவம்” என்கிறார் மொகமது அமீன் தர்.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு முசாமில் 10 மாதங்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இறுதியில் வழக்கு ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்ற ஆண்டு முசாமில் ஒரு தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட போது அவரது குடும்பத்தினரின் உலகமே இடிந்து போனது. “போலீசின் சித்திரவதையும் கொடுமைகளும் துப்பாக்கி தூக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் செய்து விட்டன” என்கிறார் முசாமிலின் தந்தை.
2. குறைவாக அடிப்பதற்காக போலீசுக்கு லஞ்சம் கொடுத்த சிறுவன்
பெயர் : அதீர் அகமத் தர்
வயது : 19
ஊர் : சோப்போர்
பணி : கல்லூரி முதலாமாண்டு மாணவர்
கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில்  குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு என்பது வெகு காலத்துக்குப் பிறகுதான் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்தது.
சோபோரின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அதீர் ஒரு லஷ்கர் போராளியாக மாறியது, காஷ்மீர் இளைஞர்களின் கதைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
கடந்த டிசம்பர் மாதம் சோப்போரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சைத்புரா கிராம மக்கள் அதிகாலையில் துப்பாக்கிச் சத்தத்தால் எழுப்பப்பட்டனர். பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 5 பாகிஸ்தானி ஊடுருவலாளர்களும் ஒரு உள்ளூர் தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட உள்ளூர் போராளிதான் அதீர்.
கால்பந்து ரசிகனான அதீர், கிறிஸ்டினோ ரொனால்டோவின் சிகையலங்காரத்துடன் கறுப்புக் கோடு போட்ட ஸ்வெட்டர் அணிந்திருக்கும் புகைப்படம் மட்டும்தான் அவனது குடும்பத்தின் பொக்கிஷமாக இருக்கிறது. “போலீஸ் பொய்யான வழக்குகளில் அதீர் போன்ற இளைஞர்களை சிக்க வைத்து அவர்களது குடும்பங்களையும் சேர்ந்து தண்டிக்கின்றனர்” என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
2011-ல் நடந்த ஒரு கல் எறிதல் சம்பவத்தில் அவனுக்கும் தொடர்பு உண்டு என்று ஒத்துக் கொள்ளுமாறு அதீர் போலீஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டான். நான்கு வாரங்களுக்கு இரக்கமில்லாமல் அடித்து துவைத்த பிறகு அவனை பிணையில் வெளியில் விட்டனர். அடிவயிற்றில் உதைப்பது, கம்பால் அடிப்பது, பெல்டுகளால் விளாசுவது என்று சித்திரவதை செய்யப்பட்டதாக அதீர் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறான்.
பிணையில் வந்த பிறகும் சித்திரவதையும் கொடூரங்களும் தொடர்ந்தன. அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கும் சிறப்பு படையினர் முகாமுக்கும் அடிக்கடி அழைக்கப்பட்டு அவன் சித்திரவதை செய்யப்பட்டான். அதை போலீஸ் உயர் அதிகாரிகள் மேற்பார்வை இட்டனர்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் அதீர் தலைமறைவாகி விட்டான். “விடாமல் தொடரும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவனுக்கு வேறு வழியே இருக்கவில்லை” என்கிறார் போலியாவால் பாதிக்கப்பட்டவரான அதீரின் சகோதரர் தவ்ஹீத் அகமது தர்.
அதீரின் குண்டு பாய்ந்த உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான போதுதான் குடும்பத்துக்கு அவனைப் பற்றிய கடைசி செய்தி வந்து சேர்ந்தது.
3. மீண்டும் போராளியாக மாறிய பையன்
பெயர் : ஆஷிக் அகமது லோன்
வயது : 22
ஊர் : ஷோப்பியன்
பணி : கல்லூரி முதலாண்டு மாணவன்
10-ம் வகுப்பில் படிக்கும் போது ஆஷிக் போராளி அமைப்பு ஒன்றில் சேர்ந்தான். ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிலிருந்து விலகி போலீசில் சரண்டைந்தான். வெளியில் வந்ததும் ஒரு மளிகைக் கடை நடத்த ஆரம்பித்ததோடு உள்ளூர் கலைக் கல்லூரியில் படிப்பதற்கும் பதிவு செய்தான்.
ஆனால், அதன் பிறகுதான் சோதனைகள் ஆரம்பித்தன. ஷோப்பியனில் உள்ள போலீஸ் முகாமுக்கு அவன் அடிக்கடி அழைக்கப்பட்டான். ஒவ்வொரு முறையும் அவன் வருவதற்கு முன்பு அவனது இரத்தம் தோய்ந்த உடலுக்கு ஒத்தடம் கொடுப்பதற்கு சுடுநீரை அவனது 45 வயதான அம்மா ஜரீபா அக்தர் தயாராக வைத்திருப்பார். “அப்போதெல்லாம் குறைந்தது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்‘ என்கிறார் அவர். ஆனால் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஊரை விட்டு ஓடி போய் விட்ட அவன் எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்படலாம் என்ற பயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவனது அம்மா.
ஆஷிக் சரணடைந்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக போலீஸ் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறது. “அவனை போராளி அமைப்பில் சேர வைத்ததே இவர்கள்தான், இப்போது வேலை வாங்கித் தருவதாக பசப்புகிறார்கள்” என்று குமுறுகிறார் ஜரீபா.
********
இந்த மூன்று பேரின் குடும்பத்தினர் கூறுவதையுமே பொய் பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறது காஷ்மீர் போலீசு.
2012ல் மட்டும் 40 சிறுவர்கள் ஹிஜ்புல் முஜாகிதினீலும், லஷ்கர்-ஈ-தொய்பாவிலும் சேர்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள். வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள். … அரசைப் பொருத்தவரை இது போராளிகளின் புள்ளிவிவரக் கணக்கில் ஒரு சேர்க்கையாக இருக்கலாம். ஆனால் காஷ்மீர் மக்களை பொறுத்த வரை இவர்கள், இராணுவமும் போலீசும் நிகழ்த்தும் கொடுமைகளால் உருவாக்கப்படும் தியாகிகள்.
நன்றி: தெகல்கா – 19.1.2013
தமிழாக்கம் : செழியன்

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: