Facebook Twitter RSS
*/

Latest News

பேஸ்புக்கில் ஆபாச படங்கள்; சர்ச்சையில் சிக்கிய இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள்!


 சமூகவலையமைப்புகளில் சர்ச்சையில் சிக்குவது இஸ்ரேலிய இராணுவத்துக்கு வாடிக்கையாக போய்விட்டது. ஏனெனில் இவற்றால் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக பல எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது இஸ்ரேலிய இராணுவம்.
ஒரு பிரச்சினை அடங்கி அதன் சூடு தணிவதற்குள் மற்றைய சர்ச்சை பூதாகரமாக உருவெடுத்து விடுகின்றது.  அதேபோல் ஒரு சம்பவம் தற்போதும் இடம்பெற்றுள்ளது.
ஆம் துப்பாகிகளுடன் உள்ளாடைகள் மட்டும் அணிந்தவாறும், அரைகுறை ஆடையுடனும் படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் வெளியிட்ட இஸ்ரேல் இராணுவ வீராங்கனைகள் சிலரே இச்சர்ச்சைக்கு காரணமாகும்.


இஸ்ரால் நாட்டு செய்தி இணையத்தளமான ‘வாலா’ இப்படங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பெண்கள் இராணுவத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் என்பதுடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள படைத்தளமொன்றைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் அனைவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய படங்கள், காணொளிகளை பகிர்வது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு யுடியூப்பில் இஸ்ரேலிய இராணுவ வீரர் எனக் கூறப்படும் நபரொருவர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள பலஸ்தீன பெண்ணொருவரை சுற்றி நடமாடும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பலஸ்தீன சிறைக் கைதியொருவருக்கு அருகில் இருந்தவாறு இஸ்ரேலிய இராணுவ வீராங்கனையொருவர் போஸ் கொடுக்கும் படமொன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் இவ்வருட ஆரம்பத்தில் பலஸ்தீனத்துக்கு எதிரான கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திருந்தார் இஸ்ரேலிய இராணுவ வீரரொருவர். மேலும் அவரே துப்பாக்கியுடன் நிர்வாண படங்களை வெளியிட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தார். இத்தகைய விடயங்களைக் கருத்தில் கொண்டு முகாமில் சேவையிலிருக்கும் காலப்பகுதியில் சமூக வலையமைப்புகளை தனது இராணுவ வீர, வீராங்கனைகள் உபயோகிக்க இஸ்ரேல் தடை விதித்திருந்தது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள படங்கள் அத் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதா என்பது தொடர்பில் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் சமூகவலையமைப்புகளில் எவற்றை பகிரவேண்டும் என்பது தொடர்பில் வரைமுறைகள் எதையேனும் இஸ்ரேல் விதித்துள்ளதாக என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
எனினும் தற்போது வெளியாகியுள்ள படங்கள் நிச்சயமாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்துங்கள்.. சீமான் கோரிக்கை

நெல்லை: தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் பெங்களூர், மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் வசிக்கும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பின்னர் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக கோவை கோட்டைமேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல்துறையினர் எந்த பொருளையும் கண்டுபிடிக்காமல் திரும்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பீர்முகமது என்பவருடன் தங்கியிருந்ததாக அலியப்பா என்பவரை கர்நாடக காவல்துறை பிடித்துச்சென்று யாருக்கும் தெரியாமலேயே காவலில் வைத்து விசாரித்துள்ளது. தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்வில் இருந்து அன்னியப்படும் ஒரு மனநிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்று சீமான் எச்சரித்துள்ளார். 

யார் அந்த யாசீன் மாலிக்? தீவிரவாதியா அல்லது போரளியா? அவர் தமிழகம் வந்தது குற்றமா?...



யாசீன் மாலிக் தமிழகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் மக்களுக்கு புதிய நபர். அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு உரிமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும், அதற்க்காக போராடும் தலைவர்களுக்கும் நன்கு பரிட்சயப்பட்ட மனிதர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் அரசியல் விளையாட்டு விளையாடுவதற்கு பழிகடாக்கலாக்கப்படும் காஷ்மீரிகளின் விடுதலைக்கான அறிவிப்பு தான் யாசீன் மாலிக் என்னும் போராளி, அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி JKLF (Jammu Kashmir Liberation Front).

காஷ்மீரை அபகரித்து கொள்ள இந்தியாவும், அதை தன் வசமாக்கி கொள்ள பாகிஸ்தானும் செய்யும் சூழ்ச்சிகளிலும், சதிவலைகளிலும் சிக்கி உயிர்களை இழந்து, உறவுகளை இழந்து தவிக்கும் அப்பாவி காஷ்மீரிகளின் விடுதலைக்கான அழைப்பாக அமானுல்லா கான் என்பவரால் மே 29, 1977-ம் ஆண்டு லண்டனில் வைத்து JKLF தொடங்கப்பட்டது. பல போராட்ட, இழப்பு வரலாறுகளுக்கு பிறகு 2005-ல் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாசீன் மாலிக்கால் இன்றளவும் வீரியம் குறையாமல் வழிநடத்தப்படுகின்றது.

மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட அவர்களது போராட்டத்தின் சாராம்சம் ஒட்டு மொத்த விடுதலை” – இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றினைந்த காஷ்மீரை உருவாக்கி, ஒரு சுதந்திர பூமியை நிறுவது. இதற்கான முயற்சிகளால் இறங்கிய JKLF, இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் பலம் பொருந்திய செல்வாக்குடன் திகழ்கிறது.

2007-ல் யாசீன் மாலிக் தலைமையில் சுதந்திரத்தை நோக்கிய பயணம்” (JOURNEY TO FREEDOM) என்ற அமைதி பிரச்சாரத்தை தொடங்கி 1 வருடம் காஷ்மீரில் சுற்று பயணம் செய்தார்கள். 3500-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் தங்களது கொள்கைகளை வேறூன்ற செய்ததோடு அம்மக்கள் படும் கஷ்டங்கள், துன்பங்கள் ஆகியவற்றில் பங்கெடுத்தார்கள். இதன் விளைவு யாசீன் மாலிக்கையும், JKLF-யும் அறியாத காஷ்மீரிகள் இல்லை என்ற நிலை உருவானது. ஜனநாயக அடிப்படையில் அறிவுரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் துடிப்பு மிக்க இளைஞர் தான் யாசீன் மாலிக்.

பலமுறை அராசாங்கத்தின், அதிகாரவர்க்கத்தின் கோரப்பிடியினால் கைது செய்யப்பட்டு சிறைகளை இருப்பிடமாக்கி கொண்டவர். காஷ்மீர் மக்களின் விடுதலைக்காக போராடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக ராஜாஸ்தான், காஷ்மீர், டெல்லி என பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏன் இந்த போராட்டம்? என்பவர்களுக்காக இந்த ஒற்றை பத்தி பதில் சொல்லும்.

இந்தியா காஷ்மீரை தன் கட்டுபாட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காய் 1 லட்சத்திற்க்கும் அதிகமான ராணுவ வீரர்களை அங்கே குவித்துள்ளது. அதன் விளைவு காய்கறி வாங்க கூட 10 ராணுவ அரண்களை கடந்து செல்ல வேண்டும். 9 அரண்களை கடந்து செல்லும் போது 10 வது அரணில் தீவிரவாதி என்று கூறி கொலை செய்யப்படலாம் என்ற அடக்கு முறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் கேட்பாரின்றி மக்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிடும் உரிமை இந்திய ராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த ராணுவ அதிகாரிகளாலும், அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் அதிகாரவர்க்கதினராலும் தங்களது கற்புகளை இழந்து, கணவன்களை இழந்து, குழந்தைகளை இழந்து தவிக்கும் காஷ்மீர் பெண்களின் கண்ணீருக்கான போராட்டம் தான் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனியின் (JKLF) போராட்டம்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாராக வருகை தந்திருந்தார் இந்த உரிமைக்கான போராட்டத்தின் சொந்தகாரரான யாசீன் மாலிக். அவர் தமிழகத்திற்கு வருகை தந்ததற்காக பல கருத்துக்கள் உலா வருகின்றன.

பிரிவினைவாதத்தை தூண்டும் காஷ்மீர் தீவிரவாதி என்றும், அவரை தமிழகத்திற்கு அனுமதித்தது அபாயகரமானது என்றும் வழக்கம் போல் தன் அரிப்பை அறிக்கை மூலம் தணித்துள்ளார் ப.ஜ.காவின் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

வெளிநாட்டுடன் தொடர்புடையவர் என்று பலமுறை கைது செய்யப்பட்ட யாசீன் மாலிக் எப்படி தமிழகம் வந்தார், இந்திய இறையாண்மையை கேள்வி கேட்டு இந்தியாவை துண்டாட துடிக்கும் அவருக்கும் அவரை அழைத்து வந்தவர்களுக்கு என்ன தொடர்பு? இதனை முளையிலேயே கிள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

யாசின் மாலிக் ஆதரவால் சீமானுக்கு என்ன லாபம்? காஷ்மீர் பயங்கரவாத சக்திகளிடம் ஏன் இந்த அக்கறை? என்ன ஆதாயம்? என்று தமிழகத்தில் இணக்கமாக வாழ்ந்த மக்களை மதத்தின் பெயரால் துண்டாடி கொண்டிருக்கும் இந்து முன்னனி தலைவர் ராமகோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்..

உரிமைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றால், 1998-ல் தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரஸ் கட்சியும், 2002-ல் குஜாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்ற பாஜகா கட்சியும் தான் பயங்கரவாத கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி அல்ல.

பிரிவைனைவாதத்தின் பெயரால் மக்களை கொன்றொழிக்கும் ராஜபக்சேக்களையும், மதவாதத்தின் பெயரால் அப்பாவிகளை அழித்தொழிக்கும் நரேந்திர மோடிகளையும் மேடைகளில் அமர்த்தி அழகு பார்க்கும் காங்கிரஸ்ஸும், பாஜாகாவும் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே தவிர யாசீன் மாலிக் அல்ல.

அவர் ஒரு சுதந்திர மனிதர். உரிமைகளை இழந்து, இழப்புகளுக்கு மத்தியில் வாழும் மனிதர்களுக்கு தான் தெரியும் அதன் வலி என்னவென்று. அந்த வலிதான் யாசீன் மாலிக்கை தமிழகத்திற்கு அழைத்து வந்திருக்கின்றது. அதே வலி இந்தியாவில் பல பாகங்களுக்கும் அழைத்து செல்லும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இல்லை.

-
நன்றி வலசை பைசல்



இஸ்ரேல் மாநாட்டை விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் புறக்கணிப்பு!


ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் புறக்கணிப்புஅமெரிக்கா:அடுத்த மாதம் இஸ்ரேலில் நடக்க இருக்கும் மாநாட்டிற்கான அழைப்பினை உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் ஏற்காமல் நிராகரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாக போற்றப்படும் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ், ஃபலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் கொடூரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலில் நடக்க இருக்கும் மாநாட்டினைப் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தமாதம் இஸ்ரேலில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றினை இஸ்ரேல் பிரதமர் ஷிமோர் ஃபெரஸ் ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கார்ப்பசேவ், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ப்ளேர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் உட்பட உலகின் பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொள்ள உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸிற்கும் ஃபெரோஸ் அழைப்பு அனுப்பியிருந்தார். இந்த அழைப்பினை ஹாக்கின்ஸ் புறக்கணித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இத்தகவலை இஸ்ரேல் வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளது.

தமது புறக்கணிப்புக்குக் காரணமாக, "ஃபாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலிய அரசின் கொள்கை பேரழிவுக்கு வழிவகுக்கக்கூடும்; அது பாலஸ்தீனியர்களிடம் நடந்து கொள்ளும் விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்" என்று விஞ்ஞானி ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது இஸ்ரேலிய அரசுக்குப் பெருத்த பின்னடைவாகக் கருதப்படுவதோடு, அடுத்த மாதம் நடக்க இருக்கும் மாநாட்டில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதற்கு முட்டுக்கட்டை இடும் என்ற அச்சத்தையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது.


காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள் !


ப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் குமுறிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குறிப்பிட்ட சில போலீசு அதிகாரிகள் தன்னை சிக்க வைத்து விட்டனர் என்ற அப்சல் குருவின் குற்றச்சாட்டு விசாரிக்கப்படாமலேயே கள்ளத்தனமாகவும் இரகசியமாகவும் அவர் தூக்கிலிடப்பட்டு விட்டார். அப்சல் குருவின் வழக்கு நாடறிந்த கதை. ஆனால் போலீசாலும் இராணுவத்தாலும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞர்களின் கதைகள் காஷ்மீரில் ஏராளம். பொய் வழக்கு, சிறை, சித்திரவதை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், தலைமறைவாவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை காஷ்மீரின் இளைஞர்களுக்கு போலீசும் இராணுவமும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. பல இளைஞர்களை கொடுமைப்படுத்தி போராளிகளாக மாற்றுவதே அரசின் அடக்குமுறைதான் என்கிறார்கள் காஷ்மீர் மக்கள்.
காஷ்மீரின் இளைய தலைமுறை போராளிகள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்ற சித்திரத்தை கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.
1. சித்திரவதையும் அவமானமும் உருவாக்கிய போராளி
பெயர் : முசாமில் அகமது தர்
வயது : 24
ஊர் : சோப்போர்
தொழில் : மருத்துவ உதவியாளர்
காஷ்மீர் கல் எறிதர்
காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கல்லெறிய வைத்து பின்னர் போராளியாக்கி கொல்கிறார்கள்.
2009-ம் ஆண்டு மருத்துவ உதவியாளர் பட்டம் பெற்று சோப்போர் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார் முசாமில். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்  ஏ.கே.47 துப்பாக்கியை காதலிக்க ஆரம்பித்திருந்தார். ’முசாமில் ஒரு தலைமறைவான லஷ்கர்-ஈ-தொய்பா போராளி’ என்று அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் என்று அறிவித்தார். 2012-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதியன்று ஸ்ரீநகருக்கு வடக்கே 66 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோப்போர் நகரத்தில் பாதுகாப்பு படையினருடனான என்கவுண்டரில் முசாமில் கொல்லப்பட்டார்.
இடையில் என்ன நடந்தது? நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த முசாமில் ஒரு காலத்தில் ராஜீவ்காந்தி எழுத்தறிவு இயக்கத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் கொல்லப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வெள்ளைத் தொப்பி தரித்த குறுந்தாடி வைத்த நம்பிக்கையான முகத்துடன் காட்சியளிக்கிறார். “மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து குடும்பத்தின் கடன்களை அடைக்க உழைத்துக் கொண்டிருந்தார்” என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
ஆனால், நவம்பர் 17, 2010-ல் நடந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது. அன்று போலீசிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த யாரோ இரண்டு பேர் ஒரு மூட்டையை முசாமில் வீட்டு தோட்டத்தில் தூக்கி எறிந்து விட்டு போனார்கள். அதைப் பார்த்து பயந்து போன அவரது அம்மா, யாருக்கும் தெரியாமல் அதை கிணற்றில் தூக்கி போட்டு விட்டார். அந்த செயலில் ஆரம்பித்த தொடர் நிகழ்வுகள் முசாமிலின் உயிரை பறிப்பதில் கொண்டு விட்டன.
விரைவிலேயே போலீசும் பாதுகாப்பு படையினரும் முசாமில் வீட்டுக்கு வந்தனர். முசாமிலின் அப்பா மொகமது அமீன் தர், முசாமில் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களையும் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் முசாமில் சித்திரவதை செய்யப்பட்டார். அவரை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து சகோதரர்கள் இருவரையும் இரண்டு கால்களையும் இரண்டு பக்கம் இழுக்கும்படி செய்தனர். அவர்களது தந்தை இதைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். முசாமிலின் கதறல்களை கேட்டு போலீஸ்காரர்கள் கிண்டல் செய்தார்கள். “மிகவும் அவமானமான மறக்க முடியாத சம்பவம்” என்கிறார் மொகமது அமீன் தர்.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு முசாமில் 10 மாதங்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இறுதியில் வழக்கு ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்ற ஆண்டு முசாமில் ஒரு தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட போது அவரது குடும்பத்தினரின் உலகமே இடிந்து போனது. “போலீசின் சித்திரவதையும் கொடுமைகளும் துப்பாக்கி தூக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் செய்து விட்டன” என்கிறார் முசாமிலின் தந்தை.
2. குறைவாக அடிப்பதற்காக போலீசுக்கு லஞ்சம் கொடுத்த சிறுவன்
பெயர் : அதீர் அகமத் தர்
வயது : 19
ஊர் : சோப்போர்
பணி : கல்லூரி முதலாமாண்டு மாணவர்
கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில்  குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு என்பது வெகு காலத்துக்குப் பிறகுதான் அவரது குடும்பத்துக்கு தெரிய வந்தது.
சோபோரின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அதீர் ஒரு லஷ்கர் போராளியாக மாறியது, காஷ்மீர் இளைஞர்களின் கதைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
கடந்த டிசம்பர் மாதம் சோப்போரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சைத்புரா கிராம மக்கள் அதிகாலையில் துப்பாக்கிச் சத்தத்தால் எழுப்பப்பட்டனர். பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 5 பாகிஸ்தானி ஊடுருவலாளர்களும் ஒரு உள்ளூர் தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட உள்ளூர் போராளிதான் அதீர்.
கால்பந்து ரசிகனான அதீர், கிறிஸ்டினோ ரொனால்டோவின் சிகையலங்காரத்துடன் கறுப்புக் கோடு போட்ட ஸ்வெட்டர் அணிந்திருக்கும் புகைப்படம் மட்டும்தான் அவனது குடும்பத்தின் பொக்கிஷமாக இருக்கிறது. “போலீஸ் பொய்யான வழக்குகளில் அதீர் போன்ற இளைஞர்களை சிக்க வைத்து அவர்களது குடும்பங்களையும் சேர்ந்து தண்டிக்கின்றனர்” என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
2011-ல் நடந்த ஒரு கல் எறிதல் சம்பவத்தில் அவனுக்கும் தொடர்பு உண்டு என்று ஒத்துக் கொள்ளுமாறு அதீர் போலீஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டான். நான்கு வாரங்களுக்கு இரக்கமில்லாமல் அடித்து துவைத்த பிறகு அவனை பிணையில் வெளியில் விட்டனர். அடிவயிற்றில் உதைப்பது, கம்பால் அடிப்பது, பெல்டுகளால் விளாசுவது என்று சித்திரவதை செய்யப்பட்டதாக அதீர் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறான்.
பிணையில் வந்த பிறகும் சித்திரவதையும் கொடூரங்களும் தொடர்ந்தன. அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கும் சிறப்பு படையினர் முகாமுக்கும் அடிக்கடி அழைக்கப்பட்டு அவன் சித்திரவதை செய்யப்பட்டான். அதை போலீஸ் உயர் அதிகாரிகள் மேற்பார்வை இட்டனர்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் அதீர் தலைமறைவாகி விட்டான். “விடாமல் தொடரும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க அவனுக்கு வேறு வழியே இருக்கவில்லை” என்கிறார் போலியாவால் பாதிக்கப்பட்டவரான அதீரின் சகோதரர் தவ்ஹீத் அகமது தர்.
அதீரின் குண்டு பாய்ந்த உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான போதுதான் குடும்பத்துக்கு அவனைப் பற்றிய கடைசி செய்தி வந்து சேர்ந்தது.
3. மீண்டும் போராளியாக மாறிய பையன்
பெயர் : ஆஷிக் அகமது லோன்
வயது : 22
ஊர் : ஷோப்பியன்
பணி : கல்லூரி முதலாண்டு மாணவன்
10-ம் வகுப்பில் படிக்கும் போது ஆஷிக் போராளி அமைப்பு ஒன்றில் சேர்ந்தான். ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு அதிலிருந்து விலகி போலீசில் சரண்டைந்தான். வெளியில் வந்ததும் ஒரு மளிகைக் கடை நடத்த ஆரம்பித்ததோடு உள்ளூர் கலைக் கல்லூரியில் படிப்பதற்கும் பதிவு செய்தான்.
ஆனால், அதன் பிறகுதான் சோதனைகள் ஆரம்பித்தன. ஷோப்பியனில் உள்ள போலீஸ் முகாமுக்கு அவன் அடிக்கடி அழைக்கப்பட்டான். ஒவ்வொரு முறையும் அவன் வருவதற்கு முன்பு அவனது இரத்தம் தோய்ந்த உடலுக்கு ஒத்தடம் கொடுப்பதற்கு சுடுநீரை அவனது 45 வயதான அம்மா ஜரீபா அக்தர் தயாராக வைத்திருப்பார். “அப்போதெல்லாம் குறைந்தது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்‘ என்கிறார் அவர். ஆனால் சென்ற ஆண்டு ஜூலை மாதம் ஊரை விட்டு ஓடி போய் விட்ட அவன் எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்படலாம் என்ற பயத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவனது அம்மா.
ஆஷிக் சரணடைந்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக போலீஸ் குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறது. “அவனை போராளி அமைப்பில் சேர வைத்ததே இவர்கள்தான், இப்போது வேலை வாங்கித் தருவதாக பசப்புகிறார்கள்” என்று குமுறுகிறார் ஜரீபா.
********
இந்த மூன்று பேரின் குடும்பத்தினர் கூறுவதையுமே பொய் பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறது காஷ்மீர் போலீசு.
2012ல் மட்டும் 40 சிறுவர்கள் ஹிஜ்புல் முஜாகிதினீலும், லஷ்கர்-ஈ-தொய்பாவிலும் சேர்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள். வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள். … அரசைப் பொருத்தவரை இது போராளிகளின் புள்ளிவிவரக் கணக்கில் ஒரு சேர்க்கையாக இருக்கலாம். ஆனால் காஷ்மீர் மக்களை பொறுத்த வரை இவர்கள், இராணுவமும் போலீசும் நிகழ்த்தும் கொடுமைகளால் உருவாக்கப்படும் தியாகிகள்.
நன்றி: தெகல்கா – 19.1.2013
தமிழாக்கம் : செழியன்

இஸ்லாத்தை தழுவிய நெதர்லாந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர் மதீனா வருகை!...


      இஸ்லாத்திற்கு கடும் எதிர்ப்பாளராக திகழ்ந்த நெதர்லாந்து நாட்டின் அரசியல் தலைவரான அர்னுட்ஃபான் டூன் சவூதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு வருகை தந்துள்ளார். இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரித்த நெதர்லாந்தில் பிரசித்திப்பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர் கிரீட் வில்டேர்ஸின் கட்சியில் அர்னுட்ஃபான் டூன் முக்கிய தலைவர் ஆவார்.
இஸ்லாத்தையும், இறுதித்தூதரையும் அவமதிக்கும் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரிப்பதில் கிரீட் வில்டேர்ஸுக்கு உதவியர்களில் முக்கியமானவர் அர்னூட்ஃபான் டூன் ஆவார். இஸ்லாத்தைக் குறித்தும், முஹம்மது நபியைக் குறித்தும் ஆழமாக படித்ததை தொடர்ந்து கடந்த மாதம் டூன் இஸ்லாத்தை தழுவியிருந்தார். ஃபித்னா திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பே டூனுக்கு இஸ்லாத்தைக் குறித்து படிக்க தூண்டியது.
மதீனா மஸ்ஜிதில் இரண்டு இமாம்களுடன் சந்திப்பை நடத்திய டூன், புனித உம்ராவை நிறைவேற்ற மக்காவுக்கு புறப்பட்டார்.நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்றத்திலும், ஹேக் நகர சிட்டி கவுன்சிலிலும் உறுப்பினரான டூன், டிவிட்டரில் தான் இஸ்லாத்தை ஏற்றதை அறிவித்திருந்தார். க்ரீட் வில்டேர்ஸின் வலதுகரமாக செயல்பட்ட டூனின், இந்த அறிவிப்பை பலரும் நகைச்சுவையாக கருதினர். ஆனால், தனது நிலைப்பாட்டை உறுதிச் செய்யும் வகையில் சிட்டி மேயருக்கு டூன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவரதுமனமாற்றம் உறுதிச் செய்யப்பட்டது.
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது குறித்து டூன் கூறியது:இஸ்லாத்தைக் குறித்து மோசமான பல கதைகளையும் நான் கேட்பதுண்டு.கட்சி தலைவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் இஸ்லாத்தைக் குறித்து விரிவாக ஆராய நான் தீர்மானித்தேன். தொடர்ந்து திருக்குர்ஆனையும், முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையையும், ஹதீஸையும்(நபிகளாரின் போதனைகள்) ஆழமாக படித்தேன். இதன் மூலம் சத்தியத்தை உணர்ந்துகொண்டேன்.இஸ்லாத்தை நான் தழுவியது குறித்து நெதர்லாந்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள்  எழுந்துள்ளன.இவ்வாறு டூன் தெரிவித்தார்.


அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி குற்ற ஒப்புதல் வாக்குமூலம்!...


2007-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த மாதம் டெல்லியில் வைத்து கைதுச் செய்யப்பட்ட குஜராத்தைச் சார்ந்த பவேஷ் பட்டேல் ஜெய்ப்பூரில் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக குண்டுவைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
மாஜிஸ்ட்ரேட் முன்பாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று என்.ஐ.ஏ(தேசிய புலனாய்வு ஏஜன்சி) தெரிவித்துள்ளது.கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பின்னர் பெப்ருவரி 27-ஆம் தேதி முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜிதின் மீது குண்டுவீசிய வழக்கிலும் பவேஷ் பட்டேல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான்.
பவேஷ் பட்டேல் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக அளித்த வாக்குமூலத்தின் முக்கிய பகுதிகள்: குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு ஒரு வாரம் முன்பாக நான் அஜ்மீருக்கு வரவேண்டும் என்று குண்டுவெடிப்பில் தொடர்புடைய தற்போது தலைமறைவாக உள்ள சுரேஷ் நாயர் என்னிடம் கட்டளையிட்டார். நான் சம்மதித்தபோது இருவரும் ஒன்றாக செல்லலாம் என்று சுரேஷ் நாயர் கூறினான். தொடர்ந்து அக்டோபர் 10-ஆம் தேதி கோத்ராவிற்கு வந்தோம். சுரேஷ் நாயர், முகேஷ் வாஸ்னி, ஹர்ஷாத் ராஜ் ஆகியோரும் இதர மூன்று பேரும் அங்கே காத்திருந்தோம். கோத்ராவில் இருந்து புறப்பட்ட குழுவினர் மறுநாள் 11-ஆம் தேதி அஜ்மீரை அடைந்தோம். மாலையில் தர்காவிற்கு சென்ற குழுவினர் குண்டை வைத்தனர். ஆனால், அஜ்மீர் பயணத்தின் நோக்கம் குறித்து எனக்கு தெரியாது. அஹ்மதாபாத்திற்கு திரும்ப செல்ல பேருந்தில் ஏறும் போது சுரேஷ் நாயர் அஜ்மீர் செல்வதன் நோக்கத்தை கூறினான். அஜ்மீர் தர்காவில் குண்டு வைக்கும் திட்டத்தை தயாரித்தவர் மனோஜ் பாய் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில் ஜோஷி ஆவான். இவ்வாறு பவேஷ் பட்டேல் தனது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
அஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கும் திட்டத்தை தயாரித்த சுனில் ஜோஷியை சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஹிந்துத்துவா தீவிரவாதிகளே சுட்டுக்கொலைச் செய்துள்ளனர். இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ஹர்ஷத் ராஜ் முன்னர் கைதுச் செய்யப்பட்டான். தலைக்கு என்.ஐ.ஏ 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட கேரளாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதி சுரேஷ் நாயர் பல வருடங்களாக தலைமறைவாக உள்ளான். ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் சூத்திரதாரிகளான ராம்ஜி கல்சங்கராவும், சந்தீப் டாங்கேவும் தலைமறைவாக உள்ளனர்.